ஸ்பெக்ட்ரம் அலைவரிசை நிறுவனங்களிடம் ரூ.28 ஆயிரம் கோடி வங்கிப் பணம் முடக்கம்?

நாடாளுமன்ற மக்களவையில் இது குறித்து பேசிய பிரணாப், 2ஜி அலைக்கற்றை உரிமம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக வங்கிகள் ரூ.28 ஆயிரம் கோடி அளவுக்கு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கடன் அளித்துள்ளன. 2ஜி உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிறுவனங்களும் இதில் அடக்கம் என்றார்.
அதாவது பல்வேறு நிறுவனங்களுக்கு 2ஜி அலைவரிசை உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இத்தொகை வங்கிகளுக்கு கிடைக்காமல் போகலாம் என்பதை அவர் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார்.
2ஜி உரிமக் கட்டணம், டவர்கள் அமைத்தல், மூலதனச் செலவுகள், நடைமுறைச் செலவுகள் என பொதுத்துறை வங்கிகள் ரூ.19,135 கோடியும், தனியார் வங்கிகள் ரூ.8,803 கோடியும் கடன் வழங்கியுள்ளன. இத்தொகை 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையிலானது.
இது தவிர, தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.76,977 கோடியை வங்கிகள் கடனாக வழங்கியுள்ளன என்று பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
மாநிலங்களவையில் நிதித்துறை இணையமைச்சர் நமோ நாராயண் மீனா எழுத்துப்பூர்வமாக ஒரு பதில் அளித்தார். அதில், இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி 2011 டிசம்பர் வரை, மின்துறையின் ஒட்டுமொத்த கடன் தொகை ரூ.2,62,532 கோடியாகும். பொதுத்துறை வங்கிகள், தனியார் நிறுவனங்கள், வெளிநாட்டு வங்கிகளில் பெற்ற கடன் ஆகியவை இதில் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications