கொடுமைக்கார சங்கர் பிதரியை டிஜிபியாக நியமித்ததை ரத்து செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி!

கர்நாடக போலீஸ் டி.ஜி.பி.யாக சங்கர் பிதரி கடந்த 6 மாதத்துக்கு முன் நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து மூத்த போலீஸ் அதிகாரியும், தற்போது தீயணைப்பு துறையின் டி.ஜி.பி.யாக பணியாற்றி வருபவருமான ஏ.ஆர்.இன்பான்ட் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், பணி சேவையில் தன்னை விட இளையவர் சங்கர் பிதரி. அவர் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டு உள்ளார். இது சட்டவிரோதமானது. நியமன நடைமுறைகள் சரியாக பின்பற்றப்படவில்லை. எனவே இந்த நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த மத்திய நிர்வாக தீர்ப்பாயம், போலீஸ் டி.ஜி.பி. சங்கர் பிதரி நியமன உத்தரவை ரத்து செய்து தீர்ப்பு கூறியது. இன்பான்ட்டை உடனடியாக பொறுப்பு டி.ஜி.பி.யாக நியமிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. சங்கர் பிதரியும் தனியாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் மீது விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
உயர்நீதிமன்ற நீதிபதி என்.குமார் தலைமையிலான டிவிஷன் பெஞ்சு, போலீஸ் டி.ஜி.பி.யாக சங்கர் பிதரி நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்து மத்திய நிர்வாக தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது. கர்நாடக அரசு மற்றும் சங்கர் பிதரியின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
கொடுமைக்கார பிதாரி
கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமார் அளித்த தீர்ப்பு:
மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பில், எவ்வித குறைபாடும் இல்லை. வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது, கர்நாடகாவும், தமிழகமும் இணைந்து நடத்திய சிறப்பு அதிரடிப்படை வேட்டையில், சங்கர் பிதரி ஏராளமான அத்துமீறலில் ஈடுபட்டவர் என்பது, பலரது வாக்குமூலத்திலிருந்து வெட்ட வெளிச்சமானது.
14 ஆதிவாசி பெண்களுக்கு, பல கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையை, அரசு வழங்கியுள்ளது. இதெல்லாம், சங்கர் பிதரியின் அத்துமீறல்களால் நிகழ்ந்தவை. சதாம் உசேன், கடாபியின் செயல்பாடுகளை விட, சங்கர் பிதரியின் செயல்பாடு குறைந்ததல்ல என்று, இந்த நீதிமன்றம் கருதுகிறது.
எனவே, உடனடியாக அவரை பதவியிலிருந்து அரசு விடுவிக்க வேண்டும். இல்லாவிடில், மாநில மக்களுக்கு பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று அத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சங்கர் பிதரி அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று கேள்வி எழுந்துள்ளது. உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்வார் என்று கூறப்படுகிறது.
அதிரடிப்படை
சந்தனக் கடத்தல் வீரப்பனைத் தேடுகிறோம் என்ற போர்வையில் அப்பாவி பழங்குடி இனப்பெண்களை பாலியல் கொடுமைக்குள்ளாக்கிய கொடூரத்தை அரங்கேற்றியது அதிரடிப் படை.
வீரப்பனைத் தேடுவதாகக் கூறிக் கொண்டு மலைக்காடுகளில் அப்பாவிகளை அதிரடிப்படை வேட்டையாடிய துயரங்களுக்கு சான்றாக தமிழ்நாட்டின் "வாச்சாத்தி" கிராமம் இன்றும் சாட்சியமளிக்கிறது. இந்த வாச்சாத்தி மலைகிராமத்தில பழங்குடி பெண்களை பாலியல் வன்முறைக்குள்ளாக்கியதற்காக இருநூறுக்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகளை நீதிமன்றம் தண்டித்த சரித்திரமும் அரங்கேறியிருக்கிறது.
இத்தகைய அதிரடிப்படையை கர்நாடகமும் நியமித்திருந்தது. கொடூர முகம் கொண்ட அதிரப்படையின் கர்நாடக தலைவராக இருந்தவர்தான் சங்கர் பிதரி என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு எதிராக பல பழங்குடி இனப்பெண்கள் வெளிப்படையாகவே வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications