சொத்துக்குவிப்பு வழக்கு: போலீஸ் முன்னாள் ஐ.ஜி.க்கு 3 ஆண்டு சிறை
மதுரை : வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஓய்வு பெற்ற போலீஸ் ஐ.ஜி.க்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து மதுரை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 1997 முதல் 2001-ம் ஆண்டு வரை சேலம் சரக போலீஸ் ஐ.ஜி.யாக இருந்தவர் ஜெகனாதன். இவர் பணியில் இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.34 லட்சத்து 50 ஆயிரம் சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. அதற்கு உடந்தையாக இருந்ததாக அவருடைய மனைவி லீலா, மகன் குமாரவேலு, மகள் ரமா, மருமகன் குத்தாலிங்கம் ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
2002ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு பிரிவினால் தர்மபுரி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கு விசாரணை மதுரை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. அங்கு விசாரணை முடிவுக்கு வந்தநிலையில் சனிக்கிழமை தீர்ப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து ஓய்வு பெற்ற போலீஸ் ஐ.ஜி.ஜெகனாதனும், அவருடைய குடும்பத்தினர் கோர்ட்டில் ஆஜரானார்கள்.
அவர்களில் ஜெகனாதன் மீதான வருமானத்துக்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கு உரிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி நாகராஜ் தீர்ப்பளித்தார்.
மேல்முறையீடு
போலீஸ் அதிகாரி குடும்பத்தினர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத நிலையில் அவர்கள் 4 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இதையடுத்து தண்டனை பெற்ற ஜெகனாதன், அதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய இருப்பதால், ஜாமீன் வழங்கும்படி கேட்டு மனு தாக்கல் செய்தார்.
அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வருகிற 27-ந் தேதி வரை அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதற்குள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்வதன் மூலம் ஜாமீன் பெற்று அந்த உத்தரவை சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று அவருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications