குடவாசல் ராஜேந்திரன் உள்பட சசிகலா ஆதரவாளர்கள் 6 பேர் நீக்கம்
சென்னை: கடந்த சட்டசபை தேர்தலில் திருவாரூர் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் குடவாசல் எம்.ராஜேந்திரன் உட்பட 6 பேர் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் சசிகலாவின் தீவிர ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக, அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கை:
கட்சியின் குறிக்கோள், கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதால், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் மாவட்ட செயலாளரும், குடவாசல் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினருமான குடவாசல் எம்.ராஜேந்திர ன், மாவட்ட மாணவர் அணி துணைச் செயலாளர் ஆனந்தராஜ், குடவாசல் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் எம்.ஆர்.அரசன் கோவன், குடவாசல் சண்முகம் (எ) தென்கோவன், பைங்காநாடு கிளைக் கழக செயலாளர் சி.மகேந்திரன், மன்னார்குடி நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் கு.பா.அறிவழகன், அன்புராஜ் ஆகியோர், கட்சியின் அடிப்படை பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகின்றனர். இவர்களுடன் அதிமுகவினர் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது.
இவ்வாறு அந்த அறிக்கையில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சட்டப்பேரவை தேர்தலில், திருவாரூர் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து, அதிமுக சார்பில் குடவாசல் ராஜேந்திரன் போட்டியிட்டு தோல்வியடைந்தவர். இவர், சசிகலாவுக்கு மிகவும் நெருக்கமானவர்.
ஜெயலலிதாவும் மீண்டும் சசிகலா இணைந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications