பழனியில் பங்குனி உத்திர விழா தொடங்கியது.

தமிழகத்தில் புகழ் பெற்ற திருவிழாக்களில் மிகவும் முக்கிய திருவிழா பங்குனி உத்திர திருவிழாவாகும். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மூன்றாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படும் பழனியில் வெகு சிறப்பாக பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது.
தீர்த்தக் காவடி
கோடையில் கொதிக்கும் வெயிலில் இருந்து முருகனை குளிர்விக்கும் வகையில் கொடுமுடி ஆற்றில் பக்தர்கள் விரதமிருந்து குடங்களில் நீரை சேகரித்து, அதை தீர்த்த காவடியாக மேளதாளங்கள் முழங்க பழனிக்கு எடுத்து வருவது இந்த திருவிழாவின் முக்கிய அம்சமாகும். அவ்வாறு கொண்டு வரும் தீர்த்த காவடி நீரை முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்துவார்கள். இத் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் முருகப் பெருமான், வள்ளி, தெய்வானை சமேதராக உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள்.
கொடி ஏற்றம்
பங்குனி உத்திர விழாவை ஒட்டி பழனி திருஆவினன்குடி முருகன் கோயிலில் சனிக்கிழமை கொடியேற்ற நிகழ்ச்சிகள் துவங்கியது. கோயிலின் முன்புள்ள தங்க கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டன. வேத விற்பன்னர்கள் மந்திரங்களை முழங்க பின்பு சேவலும், வேலும், மயிலும், சந்திரரும், சூரியரும் பொறித்த மஞ்சள் நிற கொடியேற்றப்பட்டது. அப்போது பக்தர்கள் பக்தி பெருக்கில் அரோகரா முழக்கமிட்டனர். பின்பு சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. இதில் பல ஆயிரக்கணக்காண பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பங்குனி உத்திர விழாவின் முக்கிய அம்சமான பங்குனி தேரோட்டம் ஏப்ரல் 5 ம் தேதி நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications