சென்னையில் இருவருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு
சென்னை: நாடு முழுவதும் மீண்டும் பன்றிக் காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. சென்னையில் ஹெச்1என்1 வைரஸ் தாக்குதலுக்கு இருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.
ஹெச்1என்1' வைரஸ் மூலம்தான் பன்றிக் காய்ச்சல் பரவுகிறது. கடந்த மூன்றாண்டுகளில் இந்தக் காய்ச்சலால் நாடு முழுவதும் 48,752 பேர் பாதிக்கப்பட்டனர். 2,840 பேர் உயிரிழந்தனர். இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில்தான் 953 பேர் இறந்தனர். இதைத்தொடர்ந்து குஜராத்தில் 492 பேரும், ராஜஸ்தானில் 321 பேரும், கேரளத்தில் 266 பேரும், ஆந்திரப் பிரதேசத்தில் 107 பேரும், டெல்லியில் 151 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 122 பேரும் உயிரிழந்தனர். தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 3,280 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர் என்று அரசு தரப்பு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
மீண்டும் பரவுகிறது?
இதனிடையே பருவநிலை மாற்றத்தினால் மீண்டும் பன்றிக்காய்ச்சல் பரவி வருகிறது. கடந்த 3 மாதங்களில் மட்டும் பன்றிக்காய்ச்சலுக்கு 21 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் மகாராஷ்டிரத்தில் 9 பேரும், ராஜஸ்தானில் 7 பேரும், ஆந்திரப் பிரதேசத்தில் 5 பேரும் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் 309 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பன்றிக் காய்ச்சல் வேகமாகப் பரவவில்லை. ஆங்காங்கே பரவலாகத் தான் பரவுகிறது. இதனால் அச்சப்படுவதற்கு ஒன்றுமில்லை. காய்ச்சலைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
சென்னையில் இருவர்
சென்னையில் இருவருக்கு ஹெச்1என்1 வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கிங் இன்ஸ்டிடியூட் மைய இயக்குநர் பி. குணசேகரன் கூறியுள்ளார்.
பருவநிலை மாற்றத்தால்தான் பன்றிக் காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. "ஹெச்1என்1' வைரஸ் வாழ்க்கை சுழற்சி முறையின் ஒரு பகுதிதான் பன்றிக் காய்ச்சல் பரவுவதும். நோயை உரிய நேரத்தில் கண்டுபிடித்து முறையான சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் இந்த நோயில் இருந்து குணமடைந்துவிட முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications