ஆப்கன் நேட்டோ படைகளுக்கு இந்தியா உதவும்?
வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினருக்கான உதவிகளை இந்தியா செய்யக் கூடும் என்று தெரிகிறது.
பாகிஸ்தானில் இருந்துதான் ஆப்கனில் உள்ள நேட்டோ படைகளுக்கான அனைத்து உதவிகளும் சென்று கொண்டிருக்கின்றன. ஆனால் நேட்டோ படைகள் எல்லைப் பகுதியில் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானின் 24 படையினர் கொல்லப்பட்டனர். இதையடுத்து நேட்டோ படையினருக்கான விநியோகப் பாதையை பாகிஸ்தான் மூடியது.
இது தொடர்பாக பாகிஸ்தானுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் பாகிஸ்தான் தொடர்ந்தும் பிடிவாதமாக இருந்து வருகிறது. இதனால் அமெரிக்கா கடும் அதிருப்தி அடைந்துள்ளது.
விநியோகப் பாதையை பாகிஸ்தான் மூடிவிட்டதால் திட்டமிட்டபடி 2014-ம் ஆண்டுக்குள் நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவதிலும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது
இந்நிலையில் பாகிஸ்தானுடனான பேச்சுகள் தோல்வி அடையும் நிலையில் நேட்டோ படையினருக்கான உதவிகளை செய்யுமாறு அமெரிக்கா இந்தியாவை கேட்டுக் கொள்ளும் என்று அமெரிக்க ராணுவ தளபதிகளில் ஒருவரான லெப். ஜெனரல் ப்ராக் பாண்ட்டர் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் இந்தியாவை இணைப்பது தொடர்பாக சர்வதேச அளவில் விவாதத்தை அந்நாடு உருவாக்கியிருக்கிறது.
அமெரிக்காவுக்கும் சோவியத் ரஷியாவுக்கும் பனிப்போர் நடைபெற்ற காலங்களில் "அணிசேரா கொள்கை"யைக் கடைபிடித்தது இந்தியா. பனிப்போருக்குப் பிந்தைய, சோவியத் ரஷியா சிதைவுக்குப் பின் இந்தியாவின் நிலைமை மெதுவாக தலைகீழாக மாறிவிட்டது. இதன் உச்சமாக தமிழீழத்தில் இலங்கை அரசு நிகழ்த்திய மோசமான இனப்படுகொலைக்கு இந்தியாவும் உடந்தையாக இருந்தது.
தற்போது சர்வதேச விவகாரங்களில் அமெரிக்காவின் ஆதரவு நாடாகவே இந்தியா வலம்வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆப்கன் நேட்டோ படைகளுக்கு உதவி அமெரிக்கா அணியில் இருப்பதை இந்தியா பகிரங்கப்படுத்திக் கொள்ளும் என்றே சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்












Click it and Unblock the Notifications