ராணுவ தளபதி வி.கே.சிங்கை கட்டாயவிடுப்பில் அனுப்ப வேண்டும்: பிரஜேஸ் மிஸ்ரா வலியுறுத்தல்
டெல்லி: சர்ச்சைகளின் நாயகனான ராணுவ தலைமை தளபத் வி.கே.சிங்கை கட்டாய விடுப்பில் அனுப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரஜேஸ் மிஸ்ரா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:
ராணுவ தளபதிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காததற்கு பாதுகாப்புத் துறை அமைச்சரும், ராணுவ தளபதியுமே பொறுப்பு.
இத்தகைய ராணுவ தளபதியை நீக்கினால் விளைவுகள் ஏதாவது ஏற்படக் கூடும். இதனால் அவரை கட்டாய விடுப்பில் அனுப்பிவிட வேண்டும். அவர் ஓய்வு பெற இன்னும் 2 மாதம்தான் இருக்கிறது. அதுவரை அரசாங்க ஊதியத்தில் பேசாமல் விடுப்பை அனுபவிக்குமாறு வீட்டுக்கு அனுப்பி விட வேண்டும்.
ராணுவத்துக்கான உபகரணங்கள் வாங்கும் பொறுப்பு பாதுகாப்புச் செயலாளருக்கே உரியது. பாதுகாப்புச் செயலாளருக்கு முறையான கடிதம் அனுப்பிவிட வேண்டும். அல்லது பாதுகாப்பு அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். உபகரணங்களை வாங்கும் விவகாரம் இத்துடன் முடிந்துவிடவேண்டும். அனைத்தையும் பாதுகாப்பு அமைச்சகமே பார்த்துக் கொள்ளும் என்றார் அவர்.