மின் கட்டண உயர்வை கண்டித்து 15ம் தேதி கண்டன கூட்டம்: திமுக
சென்னை: தமிழக மக்களை வாட்டி வதைக்கும் மின் கட்டண உயர்வைக் கண்டித்து திமுக சார்பில் வரும் 15ம் தேதி கண்டன பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
அதிமுக பதவிப் பொறுப்பேற்ற 2011ம் ஆண்டு மே திங்களிலிருந்து ஏழை-எளிய தமிழ் மக்களை வாட்டி வதைத்திடும் வண்ணம் பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு ஆகியவற்றைத் தொடர்ந்து ஏப்ரல் 1ம் தேதி முதல் வரலாறு காணாத அளவிற்கு 37 சதவிகித மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
தமிழக அரசு செய்துள்ள மின் கட்டண உயர்வு குறித்து திமுக தலைவர் கருணாநிதி இன்று விரிவான அறிக்கை விடுத்துள்ளார்.
இந்தக் கட்டண உயர்வு மற்றும் அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, கொலைகள், கொள்ளை, மணிக்கணக்கில் மின்வெட்டு, விலைவாசி உயர்வு, மணல் கொள்ளை, அரசு நடவடிக்கைகளில் ஆளுங்கட்சியினர் குறுக்கீடுகள், அதிமுகவின் உள்கட்சி பிரச்சனைகள், கழகத்தின் மீது அடுக்கடுக்கான பழிவாங்கும் நடவடிக்கைகள், வழக்குகள், நீதிமன்றத் தீர்ப்புகளையே மதிக்காமல் மக்கள் நலப் பணியாளர்களுக்கு பணி வழங்காமல் இழுத்தடிக்கும் போக்கு, திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு காழ்ப்புணர்ச்சியோடு மூடு விழா நடத்த முனைதல் போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டேயுள்ளது.
அதிமுக ஆட்சியினரின் இந்தக் கொடுமைகளைக் கண்டித்து வருகிற 9ம் தேதி அன்று மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறவுள்ள அறப்போர் ஆர்ப்பாட்டத்தினைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் திமுக சார்பில் வரும் 15ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கண்டன பொதுக்கூட்டங்கள் நடத்துவதென்று அறிவிக்கப்படுகின்றது.
மேற்குறிப்பிட்டுள்ள கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் ஊர் மற்றும் பங்கேற்போர் விவரப் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications