நேரு உயிருக்கு ஆபத்து: பாதுகாப்பு வழங்க டிஜிபிக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த வாரம் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். அவரைக் கொன்றவர்கள் கே. என். நேருவின் எண்ணையும் கேட்டு மிரட்டியுள்ளனர். இதையடுத்து நேருவுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு கோரி திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் சார்பில் அக்கட்சியின் வழக்கறிஞர் பிரிவு செய்லாளர் ஆ.எஸ்.பாரதி, அமைப்பு செயலாளர் கல்யாண சுந்தரம் ஆகியோர் டி.ஜி.பி. ராமானுஜத்தை நேரில் சந்தித்து மனு ஒன்றைக் கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது,
திமுக திருச்சி மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என். நேருவின் சகோதரர் ராமஜெயம் திருச்சியில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நடந்த அதே சமயத்தில் தொலைபேசி மூலம் நேருவின் தொலைபேசி எண்ணைக் கேட்டு ராமஜெயத்தின் மனைவி, உறவினர் மற்றும் கல்லூரி ஊழியர்கள் ஆகியோரை மிரட்டியுள்ளனர்.
நேரு அலுவலகத்திற்கு 'கே.என். நேரு இருக்கிறாரா?' என்று கேட்டு தொலைபேசி வந்துள்ளது. தொலைபேசியில் பேசியவன் ''அடுத்த குறி (நேரு)தான்'' என்று மிரட்டி விட்டு தொலைபேசி தொடர்பை துண்டித்துள்ளான். எனவே நேருவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.