புதுவை விவசாயி வெங்கடபதிக்கு பத்மஸ்ரீ விருது: 4ம் தேதி பிரதீபா பாட்டீல் வழங்குகிறார்
புதுச்சேரி: வேளாண் துறையில் புதுப்புது விஷயங்களைக் கண்டுபிடித்துள்ள புதுச்சேரி விவசாயி டி. வெங்கடபதியின் திறமையைப் பாராட்டி அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படவிருக்கிறது.
புதுச்சேரி மாநிலம் கூடப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடபதி. அவர் புதிய திசு வளர்ப்பு, அயல் மகரந்த சேர்க்கை முறையில் புதிய ரகங்களில் கனகாம்பர நாற்றுகளை உருவாக்குவது போன்றவற்றை கண்டுபிடித்தார். மேலும் அதிக மகசூல் தரக்கூடிய உயர் ரக சவுக்கு கன்றுகளை உற்பத்தி செய்தார்.
வேளாண் துறையில் அவரது சேவையைப் பாராட்டி பத்மஸ்ரீ விருதுக்கு புதுச்சேரி அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. இதனை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு அவரை பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்துள்ளது.
வரும் 4ம் தேதி டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலிடம் இருந்து வெங்கடபதி பத்மஸ்ரீ விருதைப் பெறுகிறார்.