பணகுடி அருகே 4 காற்றாலைகளுக்கு தீ வைப்பு: ரவுடிகள் அட்டகாசம்
வள்ளியூர்: பணகுடி அருகே இன்று அதிகாலை 4 காற்றாலைகளை ரவுடி கும்பல் தீ வைத்து எரித்தது. இதில் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது.
பணகுடி அருகே உள்ள ஆவரைக்குளத்தில் ரவுடிகளின் அட்டகாசம் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. இப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஏராளமான காற்றாலைகள் உள்ளன. இவற்றின் உரிமையாளர்களை மிரட்டி அங்குள்ள ரவுடிகள் பணம் பறித்து வருகின்றனர். பணம் கொடுக்க மறுக்கும் உரி்மையாளர்களின் காற்றாலைகளை சேதப்படுத்துவது இவர்களின் வாடிக்கையாகிவிட்டது.
நேற்றிரவு அங்குள்ள 4 காற்றாலைகளை ரவுடி கும்பல் தீ வைத்து எரித்துள்ளது.
அது குறித்த விபரம் வருமாறு, வள்ளியூர் ஒன்றிய திமுக செயலாளராக இருப்பவர் ஞானதிரவியம். இவர் அன்னை நிறுவனம் என்ற பெயரில் ஆவரைக்குளத்தில் காற்றாலைகள் அமைத்துள்ளார். இதேபோல் சென்னையைச் சேர்ந்த இன்டோ வின்ட் நிறுவனத்துக்கு சொந்தமான காற்றாலைகள் இப்பகுதியில் உள்ளது.
இந்நிலையில் இன்று அதிகாலை இந்நிறுவனங்களுக்கு சொந்தமான 4 காற்றாலைகளை ரவுடி கும்பல் தீ வைத்து எரித்தது. இதில் காற்றாலைகளின் அறையில் உள்ள கண்ட்ரோல் பேனல் முழுவதும் எரிந்து நாசமானது. இந்த தீயால் ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு ரூ.1 கோடி ஆகும்.