'அக்கா'வுடன் மீண்டும் சேர்ந்த சந்தோஷத்தில் சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராகாத சசிகலா!

பெங்களூர் தனி கோர்ட்டில் சொத்துக் குவிப்பு வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. இதில் தற்போது சசிகலாவிடம் கேள்விகள் கேட்கப்பட்டு வருகின்றன.
கடந்த டிசம்பர் மாதம் திடீரென சசிகலாவையும், அவரது குடும்பத்தாரையும் கட்சியை விட்டும், போயஸ் தோட்டத்தை விட்டும் வெளியேற்றினார் ஜெயலலிதா. ஆனால் திடீரென சமீபத்தில் ஒரு உருக்கமான அறிக்கையை விட்டார் சசிகலா. அதில் அக்கா அக்காவென ஜெயலலிதா மீது பாசத்தைக் கொட்டி மெழுகியிருந்தார். இந்தப் பாச அறிக்கையை முதல்வர் ஜெயலலிதாவும் ஏற்கனவே, பெரும் உற்சாகத்துடன் சசிகலாவும், அவரது அண்ணி இளவரசியும் மீண்டும் போயஸ் தோட்டத்துக்குள் புகுந்து விட்டனர்.
மீண்டும் ஜெயலலிதாவுடன் இணைந்ததால் சசிகலா பெரும் மகிழ்ச்சியிலும், உற்சாகத்திலும் இருப்பதாக கூறுகிறார்கள். இந்த நிலையில் இன்று பெங்களூர் தனி நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது சசிகலாவும், இளவரசியும் ஆஜராகவில்லை.
கடந்த மார்ச் 30-ந் தேதி நடைபெற்ற விசாரணையில், நீதிமன்றத்தில் ஆஜரான சசிகலா, தனக்கு படித்துப் பார்க்க 150 ஆவணங்களை தர வேண்டும் என வழக்கறிஞர் மூலம் கோரிக்கை விடுத்தார். அவர்களது கோரிக்கைக்கு பதில் அளிக்கும்படி அரசு தரப்பு வழக்கறிஞரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர், 11 வருடங்களாக இந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை அந்த ஆவணங்கள் தங்களுக்கு வேண்டும் என ஜெயலலிதா தரப்பிலோ, சசிகலா தரப்பிலோ கேட்கப்படவில்லை. இவர்களுக்கு எந்த ஆவணங்கள் தேவைப்படுகிறது என குறிப்பிடவில்லை. இதுவரை கேட்கப்படாத இந்த ஆவணங்களை தற்போது பார்க்க வேண்டும் என்று கூறுவது வழக்கை தாமதப்படுத்துவதற்கான செயல் என்று எதிர்ப்பு தெரிவித்தார். இதனை தொடர்ந்து மனு மீதான தீர்ப்பை ஏப்ரல் மாதம் 3-ந்தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி மல்லிகார்ஜுனையா உத்தரவிட்டார்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற விசாரணைக்கு சசிகலா மற்றும் இளவரசி ஆகிய இருவரும் ஆஜராகவில்லை. முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் மட்டுமே கூலிங் கிளாஸ் போட்டபடி வந்து கலந்து கொண்டார்.
ஜெயலலிதாவுடன் இணைந்த மகிழ்ச்சியில் சொத்துக் குவிப்பு வழக்கை மறந்து விட்டாரா சசிகலா...?












Click it and Unblock the Notifications