கோவையில் பலியான விவசாயி மனைவி, மருமகனுக்கும் பன்றிக் காய்ச்சல்?
கோவை: கோவையில் பன்றிக் காய்ச்சலுக்கு பலியான விவசாயி கந்தசாமியின் மனைவி மற்றும் மருமகனுக்கும் பன்றிக் காய்ச்சல் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய அவர்களைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவையிலிருந்து தான் பன்றிக் காய்ச்சல் பரவி தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் பலரது உயிரைக் காவு வாங்கியது. இந்த நிலையில் தற்போது மீண்டும் பன்றிக் காய்ச்சல் பரவ ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் என்.கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி கந்தசாமி(75) பன்றிக் காய்ச்சலுக்கு பலியானார்.
இதையடுத்து என். கவுண்டம்பாளையத்திற்கு சென்ற சுகாதார அதிகாரிகள், ஊழியர்கள் அங்கு பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். கந்தசாமியின் குடும்பத்தாருக்கு டேமி ப்ளூ மாத்திரைகள் கொடுத்தனர். சுகாதார அதிகாரிகள் இறந்த விவசாயின் குடும்பத்தாரை விசாரித்தபோது கந்தசாமியின் மகள் லலிதாவுக்கும், கர்நாடக மாநிலம் பெங்களூரில் சாப்ட்வேர் என்ஜினியராக உள்ள வெற்றிவேலுக்கும் கடந்த 26ம் தேதி திருமணம் நடந்தது தெரிய வந்தது.
அந்த திருமண நிகழ்ச்சியில் பெங்களூர் மடிவாலாவைச் சேர்ந்த ஸ்டா லோன் பிரிட்டோ, ஈஸ்வரன், கிருஷ்ணா, ஆன்டோ, தினேஷ் ஆகிய 5 பேர் கலந்து கொண்டுள்ளனர். ஒரு வேளை அவர்களில் யாருக்காவது பன்றிக் காய்ச்சல் இருந்து அவர்களிடம் இருந்து கந்தசாமிக்கு பரவி இருக்கலாம் என்று சுகாதார அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். அந்த 5 பேரில் யாருக்காவது பன்றிக் காய்ச்சல் இருந்ததா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கந்தசாமியின் மனைவி காவேரி மற்றும் மருமகன் வெற்றிவேலுக்கும் காய்ச்சல் ஏற்பட்டதால் அவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதற்கிடையே காவேரியும், வெற்றிவேலும் நேற்று மாலை 5 மணிக்கு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு வந்தனர். மருத்துவமனையின் உயர் அதிகாரியைப் பார்க்க காத்திருந்த வெற்றிவேல் கூறுகையில், எனது மாமனார் கந்தசாமி பன்றிக் காய்ச்சலால் இறந்தார். இதையடுத்து எனது மாமியார் காவேரிக்கு தொண்டை வலியும், காய்ச்சலும் ஏற்பட்டது. அதே போன்று எனக்கும் காய்ச்சல் வந்தது. அதனால் சிகிச்சை பெற வந்துள்ளோம் என்றார்.
அவர்களை மருத்துவர்கள் பன்றிக் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் தனிப் பிரிவுக்கு அழைத்துச் சென்றனர். இருவருக்கும் காய்ச்சல் இருந்ததால் ரத்த பரிசோதனை செய்யப்பட்டு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. இருவரின் சளி மாதிரிகளை பரிசோதிக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நாங்கள் நாளை சிகிச்சைக்கு வருகிறோம் என்று கூறிவிட்டு இருவரும் மருத்துவமனையில் இருந்து ஓடிவிட்டனர். ஆனால் அவர்கள் இன்று காலை சிகிச்சைக்கு வரவில்லை. அவர்கள் கோவையில் உள்ள ஏதாவது தனியார் மருத்துவமனையில் சேர்ந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
அவர்கள் 2 பேரையும் கண்டுபிடிக்குமாறு தனியார் மருத்துவமனைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications