கப்பலில் தப்பி வந்த காதலர்கள்..பிளைட்டில் விரட்டி வந்து மடக்கிய பெற்றோர்!
சென்னை: அந்தமானிலிருந்து கப்பல் மூலம் சென்னைக்கு வந்த காதல் ஜோடியை, அப்பெண்ணின் பெற்றோர் விமானம் மூலம் சென்னைக்கு விரைந்து வந்து மடக்கிப் பிடி்தததால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் அப்பெண்ணை, அவரது விருப்ப்பபடி காதலருடன் செல்ல போலீஸார் அனுமதித்து அனுப்பி வைத்தனர். இதனால் பெற்றோர் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
அந்தமானைச் சேர்ந்தவர் அல்கா மேரி ராபர்ட். 18 வயதான இவரது தந்தை ராபர்ட் அந்தமானில் பெரும் தொழிலதிபராம். இந்த நிலையில், தனது வீட்டுக்குப் பக்கத்தில் வசித்து வரும் நெல்லையைச் சேர்ந்த முத்து நிவாஸ் அலி என்பவரைக் காதலித்து வந்தார் அல்கா மேரி. இந்தக் காதலுக்கு அல்கா மேரியின் வீட்டில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது.
கடந்த சில மாதங்களாக அல்காவை வீட்டுக்குள்ளேயே வைத்து காதலைக் கட்டிப் போட பார்த்தனர். ஆனால் காதல்தான் காட்டாற்று வெள்ளமாயிற்றே...கடும் கண்காணிப்பு மற்றும் எதிர்ப்புகளைத் தாண்டி கடந்த 31ம் தேதி வீட்டை விட்டு வெளியேறினார் அல்கா. பின்னர் அவரும், முத்து நி்வாஸும் கப்பல் மூலம் சென்னைக்குக் கிளம்பினர்.
இதனால் அல்கா மேரியின் குடும்பம் அதிர்ச்சி அடைந்தது. அவரது பெற்றோர் விசாரணையில் இறங்கினர். அதில் கப்பல் மூலம் காதலருடன் அல்கா சென்னை போயிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ராபர்ட்டும், அவரது மனைவியும் விமானத்தைப் பிடித்து சென்னை விரைந்தனர்.
துறைமுகம் போலீஸாரை அணுகி தங்களது மகளை முத்துநிவாஸ் கடத்தி வருவதாக கூறி புகார் கொடுத்தனர். இதையடுத்து போலீஸார் துறைமுகம் விரைந்தனர். அவர்களுடன் அல்காவின் அப்பா, அம்மாவும் சென்றனர். அங்கு வந்திறங்கிய முத்து நிவாஸ் மற்றும் அல்கா மேரியை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
அவர்களை போலீஸார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியபோதுதான் முத்து நிவாஸ் கடத்தி வரவில்லை, அல்காவே விரும்பித்தான் வ்நதுள்ளார் என்பது போலீஸாருக்குத் தெரிய வந்தது.
மேலும், எனது காதலரை நான் கப்பலில் வைத்து திருமணம் செய்து கொண்டு விட்டேன். எங்களைப் பிரிக்க முடியாது. நான் எனது காதலருடன்தான் போவேன் என்று திட்டவட்டமாக கூறி விட்டார் அல்கா மேரி. மறுபக்கம், எனது மகள் வராமல் நான் போக மாட்டேன் என்று ராபர்ட்டும் பிடிவாதமாக கூறினார். ஆனால் அல்கா தனது நிலையில் உறுதியாக இருந்தார். இறுதியில் காதலே வென்றது.
காதலர்கள் இருவரிடமும் எழுதி வாங்கிக் கொண்டு, அவர்களை அங்கிருந்து செல்ல போலீஸார் அனுமதித்தனர்.
பெரும் ஏமாற்றத்தில் மூழ்கிய ராபர்ட் தம்பதியினர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.












Click it and Unblock the Notifications