மதுரையில் 2 நாள் பாஜக மாநாடு: அத்வானி, மோடி பங்கேற்பு
மதுரை: மதுரையில் ஏப்ரல் 28ம் தேதி துவங்க உள்ள பாஜக இரண்டு நாள் மாநில மாநாட்டிற்கு அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் வருகின்றனர். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
வரும் 28, 29 ஆகிய தேதிகளில் பாஜக மாநில மாநாடு மதுரையில் நடக்கிறது. இதில் கலந்துகொள்வதற்காக பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆகியோர் மதுரைக்கு வருகின்றனர்.
இசட் பிளஸ் பாதுகாப்பில் உள்ள அத்வானிக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வெளிமாவட்ட போலீசாரும் அழைக்கப்பட உள்ளனர். அத்வானியின் பயண விபரங்களை போலீசார் மிகவும் ரசியமாக வைத்துள்ளனர். மேலும் மதுரையை தற்பொழுதில் இருந்தே முழு கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.
அத்வானி பாதையில் குண்டு:
கடந்த ஆண்டு அத்வானி ரத யாத்திரை மேற்கொண்டு தமிழகம் வந்தார். அப்போது மதுரையை அடுத்த திருமங்கலம் அருகே பாலத்தின் கீழ் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது. இதை போலீசார் முன்கூட்டியே கண்டுபிடித்தனர். இதையடுத்து அத்வானியின் ரதயாத்திரை பாதை மாற்றியமைக்கப்பட்டது.
இதேபோல் தற்போதும் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்பதில் போலீசார் தீவிரமாக உள்ளனர்.












Click it and Unblock the Notifications