குடியரசுத் தலைவர் வேட்பாளர் பட்டியலில் இணைந்தார் தொழில்நுட்ப ஆலோசகர் சாம்பிட்ரோடா

நாட்டின் 16-வது குடியரசுத் தலைவர் வரும் ஜூலை மாதம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். குடியரசுத் தலைவராக யாரை மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி முன் நிறுத்தும் என்று நாள்தோறும் ஒவ்வொரு யூகங்களும் ஒவ்வொரு பெயரும் வெளியாகிக் கொண்டிருக்கிறது.
அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு சாதகமாக இல்லாத நிலையில் முக்கிய விவகாரங்களில் கூட்டணிக் கட்சிகளை மத்திய அரசு நம்பியிருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வில் மிகவும் கவனம் செலுத்தப்படுகிறது. சிறுபான்மை, தலித் அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தில் இருந்து ஒருவரை முன் நிறுத்துவதன் மூலம் சிக்கலான நிலைமைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்பது காங்கிரசின் கணக்கு.
குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் ஓய்வு பெறும் நிலையில் தற்போதைய துணைக் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி, மக்களவைத் தலைவர் மீரா குமார், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் டாக்டர் கரண் சிங் ஆகியோரது பெயர்கள் குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கான பட்டியலில் இடம்ப்டித்திருக்கின்றன.
இந்தப் பட்டியலில் இப்போது இணைந்திருக்கிறார் பிட்ராடோ.
குஜராத்தின் சுரேந்திரர் நகர் மாவட்டம் ஹல்வாட் தாலுகா திகார் கிராமத்தைச் சேர்ந்தவர் பிட்ராடோ. ஆனால் இளம்வயதிலேயே இவரது குடும்பத்தினர் ஒரிசாவுக்கு இடம் பெயர்ந்து விட்டனர்.
அமெரிக்காவுக்குச் சென்று தகவல் தொழில்நுட்பத்துறையில் கோலோச்சிக் கொண்டிருந்த பிட்ராடோவை ராஜீவ்தான் இந்தியாவுக்கு அழைத்து வந்தார். கணணி மற்றும் தகவல்தொழில்நுட்பத் துறையில் இந்தியாவுக்கு பங்களிப்புச் செய்வதற்காக அழைக்கப்பட்டார். கொடுத்த வேலையை மிகச் சரியாக செய்து இன்று இந்தியாவில் நடந்துள்ள கம்ப்யூட்டர் புரட்சிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தார்.
தற்போது பிரதமர் மன்மோகன் சிங்கின் தகவல் தொழில்நுட்ப மேலாண்மை ஆலோசகராக இருக்கிறார்.
இதுமட்டுமின்றி மேற்குவங்கத்தில் மமதா பானர்ஜி ஆட்சியைக் கைப்பற்றவும் இவரது ஆலோசனைதான் காரணம் என்கிறது அரசியல் வட்டாரம். இதேபோல் சரத்பவார் மற்றும் நவீன் பட்நாயக் ஆகியோருடனும் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருப்பவர் என்பதால் இவரது வாய்ப்பை கூட்டணிக் கட்சிகள் முட்டுக் கட்டையின்றி ஏற்கும் என்பதே காங்கிரசின் எண்ணம்.
அணு விஞ்ஞானியான அப்துல் கலாம் நாட்டின் குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டதை முன்மாதிரியாகக் கொண்டு சாம் பிட்ரோடாவை முன்னிறுத்துவதாகவும் கூறப்படுகிறது.
சாம் பிட்ரோடா தேர்வு செய்யப்பட்டால் குஜராத்தைச் சேர்ந்த ஒருவர் நாட்டின் உயரிய பதவியில் அமருவது இதுவே முதல்முறையாக இருக்கும்.












Click it and Unblock the Notifications