புதிய தலைமைச் செயலக கட்டிட விவகாரம்: சட்டசபையில் திமுக, அதிமுக காரசார விவாதம்
சென்னை: புதிய தலைமைச் செயலக கட்டிடம் அரைகுறையாக கட்டப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது.
அந்த விவாத விவரம் வருமாறு,
துரைமுருகன்(திமுக): மதுரவாயல் மேம்பால பணிகள் ரூ.18,000 கோடி மத்திய அரசின் நிதியில் நடந்து வந்தது. அந்த பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதாக பத்திரிக்கைகளில் செய்தி வருகிறதே இது உண்மையா?
அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி: இந்த திட்டம் ஆராயந்து கொண்டு வரப்படாமல் அவசர கோலத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.
அமைச்சர் வைத்திலிங்கம்: நீர்நிலையில் தூண்கள் அமைப்பதால் நீர் நிலை ஆதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
துரைமுருகன்: இந்த பணியை மீண்டும் தொடர அரசு முயற்சி செய்ய வேண்டும். மக்கள் பணம் வீணாகிவிடக் கூடாது. இதே போன்று தான் புதிய தலைமைச் செயலக கட்டிடத்தையும் நாங்கள் கட்டினோம். இந்த சட்டசபையில் இடநெருக்கடி உள்ளதாகக் கூறி அதிமுக ஆட்சியிலும் கூடத் தான் வேறு இடத்தை பார்த்தீர்கள். ஆனால் திமுக ஆட்சியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது என்பதற்காக அதை அப்படியே விடுவதா?
அமைச்சர் கே.பி.முனுசாமி: புதிய தலைமைச் செயலக கட்டிடம் உயர்ந்த மருத்துவமனையாகத் தான் மாற்றப்படுகிறது. அது ஒன்றும் வீணாகவில்லை.
துரைமுருகன்: அந்த கட்டிடம் ஒன்றும் எங்கள் வீட்டு பணத்தில் கட்டியதன்று. அரசாங்கத்தின் பணம்.
அமைச்சர் நத்தம் விசுவநாதன்: அந்த பணத்தை பயனுள்ள முதலீடாகதான் இந்த அரசு மாற்றுகிறது.
முதல்வர் ஜெயலலிதா: துரைமுருகன் பேசுகையில் ஏதோ இந்த சட்டசபையில் இட நெருக்கடி இருந்ததாகவும், வேறு இடம் பார்த்ததாகவும் கூறினார். திமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தை புறக்கணித்து அதை வீணடிப்பதாகக் கூறினார். அவர் சொல்லும் அடிப்படையே தவறு. இந்த சட்டசபையில் இட நெருக்கடி உள்ளது என்று நான் சொல்லவேயில்லை. ஒட்டு மொத்த தலைமைச் செயலகத்தில் தான் இடநெருக்கடி உள்ளது என்று கூறினோம்.
புதிய தலைமைச் செயலகம் முழுமையாக தலைமை செயலகத்துக்கு பயன்பட்டது போன்று துரைமுருகன் பேசினார். தமிழக அரசில் உள்ள 36 துறைகளில் வெறும் 6 துறைகள் தான் புதிய தலைமைச் செயலகத்திற்கு மாற்றப்பட்டு செயல்பட்டன. மீதமுள்ள 30 துறைகளும் கோட்டையில் தான் செயல்பட்டு வந்தன. இவர்கள் அரைகுறையாக கட்டிவிட்டதால் அதிகாரிகள் அலை வேண்டிய நிலை ஏற்பட்டது. அங்கு 36 துறை அமைச்சர்கள் இருப்பார்கள். ஆனால் வெறும் 6 துறைகளுக்கு மட்டுமே அலுவலகங்கள் இருக்கும். மீதமுள்ள 30 துறைகளுக்கு அலுவலகம் இல்லை. இதனாலேயே நிர்வாகத்தில் குழப்பமும், தாமதமும் ஏற்பட்டது.
அப்படியே கோட்டையில் இருந்து அலுவலகத்தை மாற்றினாலும் ஒரே ஒரு துறைக்கு தான் இடம் இருந்தது. எல்லாமே அரைகுறையாக இருந்தது. அந்த கட்டிடமும் அரைகுறையாக கட்டப்பட்டுள்ளது என்றார்.











Click it and Unblock the Notifications