சட்டப்பேரவையில் இருந்து 2 தி.மு.க. எம்.எல்.ஏக்கள் காவலர்களால் வெளியேற்றம்
சென்னை: சட்டப்பேரவையில் சபாநாய்கர் ஜெயக்குமாரை சொடக்குப் போட்டுக் கூப்பிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ. சிவசங்கர் மற்றும் பேச அனுமதி கோரி நின்று கொண்டே இருந்த தி.மு.க.வின் ஜெ. அன்பழகன் ஆகியோர் அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.
இன்று காலை சட்டப்பேரவையில் விழுப்புரம் மருத்துவக் கல்லூரியில் தி.மு.க. ஆட்சியில் வாங்கப்பட்ட உபகரணங்கள் பற்றிய விவகாரத்தை அமைச்சர் சி.வி. சண்முகம் எழுப்பினார்.
விழுப்புரம் மருத்துவக் கல்லூரி
அப்போது நடந்த விவாதம்:
அமைச்சர் சி.வி.சண்முகம்: விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பற்றி, பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. இதைத் தொடர்ந்து அங்கு சென்று அமைச்சர்கள் ஆய்வு செய்தோம். கடந்த ஆட்சியில் கட்டப்பட்ட இந்த மருத்துவமனைக்கு வாங்கப்பட்ட கருவிகள் எதுவும் பயன்படாமல், உபயோகமின்றி ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதில் ஊழல் நடந்துள்ளது.
(ஆதாரம் கோரி தி.மு.க.வின் கூச்சலிட்டனர்)
சி.வி.சண்முகம்: தைரியமிருந்தால் சவாலை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் ஆட்சியில் வாங்கப்பட்ட கருவிகள் தகுதியற்றவை என்பதால், பயன்பாடு ஏதுமின்றி ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன என்பதை நாங்கள் நிரூபிக்கத் தயார்.
அன்பழகன் வெளியேற்றம்
பேரவைத் தலைவர் ஜெயக்குமார்: உங்கள் ஆட்சியில் வாங்கப்பட்ட மருத்துவ உபகரணங்கள் செயல்படவில்லை என்ற சவாலை ஏற்கிறீர்களா? என்று தி.மு.கவினரை பார்த்து கேட்டார்.
(இதையடுத்து தி.மு.க.,வினர் எழுந்து பேச முயன்றனர். ஜெ.அன்பழகன் பேசுவதற்கு வாய்ப்பு கேட்டார். ஆனால், தி.மு.க., கொறடா சக்கரபாணிக்கு பேச வாய்ப்பளிப்பதாக, பேரவைத் தலைவர் ஆனாலும் அன்பழகன் தொடர்ந்து நின்று கொண்டிருந்ததால், அவரை வெளியேற்ற, அவைக் காவலர்களுக்கு பேரவைத் தலைவர் உத்தரவிட்டார்)
தி.மு.க. கொறாடா சக்கரபாணி: விழுப்புரம் மருத்துவமனையில் உபகரணங்கள் பழுதடைந்துள்ளதாகக் கூறியது பற்றி, நாங்கள் எதுவும் கூறவில்லை. ஊழல் நடந்துள்ளது என்று அமைச்சர் சண்முகம் கூறுகிறார். அதற்கு என்ன ஆதாரம் என்றுதான் கேட்கிறோம்.
சரத்குமார்: பயன்படாமல் இருப்பதை ஒப்புக் கொள்பவர்கள், ஊழல் என்ற வார்த்தையை மட்டும் ஏற்க மறுக்கின்றனர். ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் செய்து சிறையில் இருப்பவர்தானே இவர்களது கட்சியின் கொள்கை பரப்புச் செயலர்.
சொடக்குப் போட்டுக் கூப்பிட்ட சிவசங்கர்
அப்போது நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எழுந்து பேரவைத் தலைவரை தி.மு.க., உறுப்பினர் சிவசங்கர் சொடக்கு போட்டு கூப்பிடுகிறார் என்றார்.
இதையடுத்து "அவையில் தி.மு.க. உறுப்பினர் சிவசங்கர் நடந்த விதம் சரியில்லை என்பதால், அவரை காவலர்கள் வெளியேற்ற வேண்டும்" என்று அவைக் காவலர்களுக்கு பேரவைத் தலைவர் ஜெயக்குமார் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் முனுசாமி, ஜெ. அன்பழகனும் சிவசங்கரும் எதற்கெடுத்தாலும் அவையில் தான்தோன்றித்தனமாக நடக்கின்றனர். தொடர்ந்து இவர்கள் இவ்வாறு நடந்து கொண்டால், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
இதனிடையே பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும், தி.மு.க., - காங்கிரஸ் - தே.மு.தி.க., - மார்க்சிஸ்ட் கட்சியினர் எழுந்து நின்று, மின் கட்டண உயர்வு குறித்து பேச அனுமதி கேட்டனர். அதற்கு, பேரவைத் தலைவர் அனுமதி மறுத்தார். "அறிவிப்பு ஒன்றை வெளியிட முதல்வர் அனுமதி கேட்டுள்ளார். அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதில், உறுப்பினர்கள் குறுக்கிடக் கூடாது' என்று பேரவைத் ஜெயக்குமார் கூறினார். ஆனால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நின்றபடியே தொடர்ந்து குரல் கொடுத்தனர். அவர்களை, பேரவைத் தலைவர் எழுந்து நின்று எச்சரித்ததையடுத்து, எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
வெளிநடப்பு செய்துவிட்டு வெளியேவந்த மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசும்போது, "மின் கட்டணத்தை, பொதுமக்கள் சமாளிக்க முடியாத அளவுக்கு கடுமையாக உயர்த்தியுள்ளனர். மிக முக்கியமான இப்பிரச்னை; குறித்து பேரவையில் பேச அனுமதி கேட்டோம். அவர்கள் அனுமதி மறுத்ததால் வெளிநடப்பு செய்துள்ளோம் என்றார்.











Click it and Unblock the Notifications