ஆஸ்திரேலியாவில் முகாமிடத் தொடங்கியது அமெரிக்க கடற்படை-வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு
டார்வின்: ஆஸ்திரேலியாவின் வடபகுதி துறைமுகமான டார்வின் நகருக்கு வந்த 200 வீரர்களைக் கொண்ட அமெரிக்க கடற்படைக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா கடந்த ஆண்டு மேற்கொண்ட பயணத்தின்போது ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின்படி முதல்கட்டமாக வடக்கு ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரில் அமெரிக்கப் படைகள் முகாமிட்டுள்ளன.
அமெரிக்கப் படைகளை வரவேற்றுப் பேசிய ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித், அமெரிக்கப் படையின் வருகை உற்சாகமளிக்கிறது என்று கூறியுள்ளார்.
மேலும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் துணை ஷெரீப்பாக ஆஸ்திரேலியா வருணிக்கப்படுவதைப் பற்றி தமது நாடு கவலைப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய ஆஸ்திரேலியாவுக்கான அமெரிக்கத் தூதர் ஜெப்ரி ப்ளீச், ஆசிய-பசிபிக் பிராந்தியட்த்ஹில் அமைதியையும் நிலைத்தன்மையையும் உருவாக்க அமெரிக்கா தொடர்ந்து பாடுபடும் என்றார். சர்வதேச கடல்வழி வர்த்தகத்தில் முக்கியப் பங்காற்றும் இந்தியப் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல் மற்றும் திமோர் கடற்பரப்பை எளிதில் எட்டக் கூடியவகையில் டார்வின் துறைமுகம் அமைந்திருப்பது சிறப்புக்குரியது என்றும் அவர் கூறினார்.
"எமது கடற்படையினர் இப்பிராந்தியத்தில் எங்கும் பயிற்சி பெறுவதற்கு எமக்குக் கிடைத்திருக்கக் கூடிய அற்புதமான வாய்ப்பு என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினார் பசிபிக் பிராந்திய கடற்படை தளபதி டுயானே திசென்.
தற்போது 200 அமெரிக்க கடற்படையினர் ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்துள்ளனர். இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 2017-ம் ஆண்டில் 2500 ஆக அதிகரிக்கப்பட உள்ளது.
வியட்நாம் போருக்குப் பிறகு இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்கா மேற்கொண்டிருக்கும் மிகப்பெரிய முதலாவது ராணுவ நடவடிக்கை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
தென்னாசிய அரசியல் விளைவுகள்
தற்போது டார்வின் துறைமுகத்தில் அமெரிக்காவின் போர்க் கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியப் பெருங்கட்ல், பசிபிக் பெருங்கடல் மற்றும் திமோர் கடற்பரப்பை எளிதில் அமெரிக்க போர்க் கப்பல் சென்றடையும்.
வளைகுடா நாடுகளில் இருந்து எண்ணெய் எடுத்துச் செல்லும் சீனாவின் கப்பல்கள் வழக்கமாக மலாக்கா ஜலசந்தி வழியேதான் செல்லும். ஆனால் பெரிய கப்பல்கள் அனைத்துமே திமோர் கடற்பரப்பில்தான் சுற்றிக் கொண்டு செல்கின்றன.
டார்வின் துறைமுகத்திலிருந்து கூப்பிடுதொலைவில்தான் இந்த திமோர் கடற்பரப்பு உள்ளது.
ஆக சீனாவை முதல்படியாக சுற்றி வளைக்க காலடி வைத்திருக்கிறது அமெரிக்கா.
டார்வின் துறைமுகத்தைத் தொடர்ந்து அடுத்து கோக்கோஸ் மற்றும் கிறிஸ்துமஸ் தீவுகளிலும் டேரா அடிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதன் மூலமாக சீனாவை அடுத்த கட்டமாக நெருக்கவும் வாய்ப்பிருக்கிறது.
இந்தியாவும் ஏற்கெனவே அமெரிக்காவுடன் நெருங்கிய ராணுவ உறவுகளைப் பேணிவருகிறது. ஆஸ்திரேலியாவும் யுரேனிய ஏற்றுமதி போன்ற சலுகைகளைக் காட்டி இந்தியாவுடன் நல்லுறவை வளர்த்து வருகிறது.
தென்னாசிய பிராந்தியத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய மூன்று பெரிய நாடுகள் ஓரணியில் நிற்கின்றன....
இவை அல்லாமல் வியட்நாம் ஏற்கெனவே இந்தியாவுடன் கை கோர்த்து சீனாவுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறது. மியான்மரும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கோரிக்கையை ஏற்று தேர்தலையும் கூட நடத்தி சுமூக உறவுக்கு ஏங்கி வருகிறது.
இலங்கையும்கூட 2006-ல் அமெரிக்காவுடனான ராணுவ ஒப்பந்தப் படி போர் ஒன்று நிகழ்ந்தால் அது அமெரிக்கா பக்கம்தான் நிற்க வேண்டும் என்று ஒப்புக் கொண்டிருக்கிறது.
ஆஸ்திரேலியாவில் அமெரிக்காவின் நுழைந்திருப்பதன் மூலம் அமெரிக்காவுக்குச் சார்பான அரசுகளை தென்னாசியாவில் உருவாக்கிக் கொள்ளும் நடவடிக்கைகளை அமெரிக்கா இனி தீவிரப்படுத்தக்கூடும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications