ராணுவப் புரட்சியா?.. முட்டாள்தனமான பேச்சு: ராணுவத் தளபதி வி.கே.சிங்
டெல்லியில் ஜனவரியில், ராணுவ நடமாட்டம் வழக்கத்திற்கு விரோதமாக இருந்ததாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகின. தனது வயதுப் பிரச்சினை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தளபதி வி.கே.சிங் வழக்குத் தொடர்ந்த நாளில் நடந்த இந்த ராணுவ நடமாட்டமானது புரட்சிக்கான முயற்சியா என்றும் செய்திகள் வெளியானதால் பரபரப்பானது.
இருப்பினும் இதை உடனடியாக பிரதமரும், பாதுகாப்பு அமைச்சரும் மறுத்தனர். அதேபோல ராணுவமும் மறுப்பு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் நேபாளத்திற்கு வந்துள்ள ராணுவத் தலைமைத் தளபதி வி.கே.சிங்கிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, இது முட்டாள்தனமான பேச்சு. இதைத் தவிர சொல்வதற்கு வேறு ஒன்றும் வார்த்தை இல்லை என்றார் கோபமாக.
காத்மாண்டுவில் நடைபெறும் 3 நாள் இயற்கைப் பேரிடர் நிர்வாகம் மற்றும் மனிதாபிமான உதவிகள் தொடர்பான பிராந்திய கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக வி.கே.சிங் நேபாளம் வந்துள்ளார்.