ராணுவ தளவாட பற்றாக்குறை- வி.கே.சிங்குக்கு சம்மன் அனுப்புகிறது பார்லி. பாதுகாப்பு குழு?
டெல்லி: இந்திய ராணுவத்தில் வெடிமருந்துகள் மற்றும் தளவாடங்கள் பற்றாக்குறை உள்ளதாக கூறியுள்ளது தொடர்பாக விளக்கம் பெற ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங்குக்கு சம்மன் அனுப்ப வேண்டும் என்று நாடாளுமன்ற பாதுகாப்புக் குழு உறுப்பினர் நரேஷ் குஜ்ரால் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் ராணுவத்தில் வெடிமருந்துகள் மற்றும் தளவாடங்கள் பற்றாக்குறை தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தலைமை தளபதி வி.கே.சிங். கடிதம் எழுதியிருந்தார். இக்கடிதம் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
வி.கே.சிங் கூறியது உண்மைதான் என்கிற வகையில் போர் ஏற்பட்டால் ராணுவத்துக்கான வெடிமருந்துகள் 10 நாட்களுக்கு மட்டுமேதான் தாக்குப் பிடிக்கக் கூடியதாக இருக்கிறது என்ற உண்மையும் வெளியானது.
வி.கே.சிங்கின் இந்த கடிதம் குறித்து கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற பாதுகாப்புக் குழு உறுப்பினர் சிரோமணி அகாலிதள உறுப்பினர் நரேஷ் குஜ்ரால் கூறியுள்ளதாவது:
இந்த விவகாரம் கடும் அதிர்ச்சியையே ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வி.கே.சிங்குக்கு சம்மன் அனுப்பி உரிய விளக்கம் பெற வேண்டும் என்று நாடாளுமன்ற பாதுகாப்புக் குழுத் தலைவரைக்கேட்டுக்கொள்கிறேன் என்றார் அவர்.
அமைச்சக அதிகாரிகளே பொறுப்பு?
இருப்பினும் ஓய்வு பெற்ற ராணுவ தளபதி சங்கர் பிரசாத் இது தொடர்பாக கூறுகையில், நாட்டின் பாதுகாப்பு என்பது முற்று முழுதாக பாதுகாப்பு அமைச்சகத்தையே சேர்ந்தது. ராணுவம் பொறுப்பல்ல..உள்நாட்டுப் பாதுகாப்புக்கு உள்துறை அமைச்சகமே பொறுப்பு... இதனால் ராணுவ தளபதிக்கு சம்மன் அனுப்புவதைவிட்டு பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளை அழைத்து விளக்கம் பெற வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications