சபரிமலை அய்யப்பன் அதிருப்தி: தேவபிரசன்னம் பார்த்த ஜோதிடர்கள் எச்சரிக்கை

சபரிமலை அய்யப்பன் கோயிலில் அன்னதான மண்டபம் அமைப்பதற்காக தேவபிரசன்னம் பார்க்கப்பட்டது. கோவில் தந்திரி கண்டரரு மகேஸ்வரரு முன்னிலையில் கடுப்பசேரி பத்மநாபசர்மா தலைமையில் பார்க்கப்பட்ட தேவபிரசன்னத்தில் வெளியான தகவல்கள்:
உற்சவமூர்த்தியில் குறை
கோவிலின் சன்னதி சாஸ்திர முறைப்படி அமைக்கப்படவில்லை. குறைபாடுடன் இருந்த உற்சவமூர்த்தி சிலையை புதிய மேல்சாந்தி சரி செய்திருந்தாலும் முழுமையாக சரி செய்யப்படவில்லை. அன்னதான மண்டபத்துக்கான இடத்திலும் சில மாற்றங்களை செய்ய வேண்டும்.
அய்யப்பனுக்கு அதிருப்தி
இதையெல்லாம் செய்வதற்கு முன் சாமி அய்யப்பன் அதிருப்தியில் இருக்கிறார். அதாவது அந்த காலத்தில் சிறிதளவு பொருட்களை வைத்தே பூஜை செய்யப்பட்டது. இப்போது கோவில் வளர்ச்சி அடைந்துவிட்ட நிலையிலும்கூட அதே அளவு பொருட்களை பூஜைக்கு பயன்படுத்துவதாலேயே அய்யப்பனுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதாம். இதுமட்டுமின்றி பூஜையிலும்கூட முழுமையான சம்பிரதாயங்கள் கடைபிடிக்கப்படுவதில்லை என்பதாலும் சாமி கோபத்தில் இருக்கிறாராம்.
அம்மனுக்கும் கோபம்
அய்யப்பன் கோயில் அருகே உள்ள மாளிகைப்புறத்தம்மனும் கோபத்தில் இருக்கிறாராம். இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது பஸ்மக்குளத்தை மாற்றியதுதானாம். மீண்டும் பழைய இடத்துக்கே பஸ்மக் குளத்தை மாற்ற வேண்டும் என்கிறாராம் அம்மன்.
மேலும் ராசிப் பொருத்தத்திலும் ஒரு ராசி பாதகமாக வந்திருப்பதால் பிரச்சனைகள் பெரிய அளவு ஏற்படும் என்கின்றனர் ஜோதிடர்கள்.
நிர்வாக அதிகாரிக்கு தண்டனை
கோவில் தந்திரியின் அனுமதியுடனும் செயல் அலுவலரின் பரிந்துரையுடன் முன்கூட்டியே விண்ணப்பித்து அனுமதி பெற்றே கேரள கோவில்களில் தேவபிரச்சனம் நடத்தப்பட வேண்டும்.
இதை மீறி சபரிமலை கோவிலில் பிரசன்னம் பார்த்ததாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் கோவில் நிர்வாக அதிகாரி ராஜனை தற்காலிக பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளது. செயல் அலுவலர் சதீஷிடம் விளக்கம் கோரவும் முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications