சோனியா, பிரணாப்புடன் சந்திப்பு- போராட்டத்தைக் கைவிட்டனர் நகைக் கடை உரிமையாளர்கள்
டெல்லி: தங்கம் மீதான இறக்குமதி வரி உயர்வை திரும்பப் பெறுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி அளித்த உறுதிமொழியை ஏற்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மேற்கொள்ளப்பட்டு வந்த கடையடைப்புப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதிநிலை அறிக்கையில் தங்கம் மீதான இறக்குமதி வரி 2 விழுக்காட்டில் இருந்து 4 விழுக்காடாக உயர்த்தப்பட்டது. தங்கத்துக்கான சுங்க வரியும் 1 விழுக்காடாக அதிகரிக்கப்பட்டது. 5 விழுக்காடு வரி விதிப்பால் தங்கள் தொழில் மிக கடுமையாக பாதிக்கப்படும் என்று நகைக்கடை வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் சுமார் 70 ஆயிரம் நகை கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
சோனியாவுடன் சந்திப்பு
இந்நிலையில் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நகைக் கடை உரிமையாளர்கள் இன்று காலை சந்தித்துப் பேசினர். மொத்தம் 12 பேர் கொண்ட குழுவினர் சோனியாவை சந்தித்து கூடுதல் வரிவிதிப்பை திரும்பப் பெற வலியுறுத்தினர். இதனால் ஏற்படும் பாதிப்புகளையும் அவர்கள் விளக்கினர்.
பிரணாப் முகர்ஜி உறுதி
சோனியாவுடனான சந்திப்புக்குப் பிறகு மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியையும் நகைக் கடை உரிமையாளர்கள் குழுவினர் சந்தித்துப் பேசினர். தங்கம் மீதான வரி உயர்வை குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று ஏற்கெனவே பிரணாப் முகர்ஜி தெரிவித்திருந்தார். இதை இன்றைய கூட்டத்தில் நகைக் கடை உரிமையாளர்கள் சுட்டிக்காட்டினர். இதைத் தொடர்ந்து நகைக் கடை உரிமையாளர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாக நிதி அமைச்சர் பிரணாப் உறுதியளித்தார்.
போராட்டம் வாபஸ்
இச்சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நகைக்கடை உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகள், வரும் 24-ந் தேதி நாடாளுமன்றத்தில் தங்கம் மீதான இறக்குமதி வரி உயர்வை திரும்பப் பெறுவது அல்லது குறைப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதாக நிதி அமைச்சர் உறுதியளித்துள்ளார். இதை ஏற்று தாங்கள் நடத்தி வரும் போராட்டத்தை உடனே திரும்பப் பெறுகிறோம் என்று கூறினர்.












Click it and Unblock the Notifications