நாடாளுமன்றத்துக்கு இடைத்தேர்தல் நடத்துவதில் யாருக்கும் விருப்பமில்லை: பிரகாஷ் காரத்

கோழிக்கோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டையொட்டி செய்தியாளர்களிடம் பிரகாஷ்காரத் கூறியதாவது:
கோழிக்கோட்டில் தற்போது நடைபெற்று வரும் 20-வது மாநாட்டில், தேசிய அளவில் மூன்றாவது அணி அமைப்பது பற்றி விவாதிக்கப்படவில்லை. மக்கள் பிரச்சினைகளில் கூட்டு நடவடிக்கை எடுக்க என்கிற வகையில் இடதுசாரிக்கட்சிகள், ஜனநாயகக் கட்சிகள், மதசார்பற்ற சக்திகளை ஒன்றிணைத்து அணி சேர்க்க முயற்சி செய்கிறோம்.
நாடாளுமன்ற இடைத்தேர்தல்?
உத்தரபிரதேச பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள சமாஜ்வாதி கட்சித்தலைவர் முலாயம்சிங் உள்பட எந்தவொரு தலைவருமே நாடாளுமன்றத்துக்கு திடீர் இடைத்தேர்தலை நடத்துவது குறித்து தீவிரமாக சிந்திப்பதாக நாங்கள் கருதவில்லை.
நாடாளுமன்றத்துக்கு திடீர் தேர்தல் வருவதில் யாருக்கும் விருப்பமும் இல்லை. 2008-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை நாங்கள் திரும்பப்பெற்றது குறித்து விரிவாக விவாதித்தோம். நாங்கள் முன்கூட்டியே திரும்பப் பெற்று அணுசக்தி ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வராமல் தடுத்திருக்க வேண்டும் என்று கருதுகிறோம்.
கட்சியின் மூத்த தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தனை மீண்டும் அரசியல் விவகாரக்குழுவில் சேர்க்கப்படுவது போன்ற விவகாரங்கள் குறித்து மாநாட்டில் விவாதிப்போம். இக்கூட்டத்தில் உடல்நலக் குறைவால் மேற்குவங்க மாநில முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா பங்கேற்கவில்லை என்றார் அவர்.
சி.பி.எம்-ல் ஒழுக்கக் கேடு
கோழிக்கோடு மாநாட்டில் மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைமை பற்றிய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சுமார் 10 லட்சம் பேரை உறுப்பினர்களாகக் கொண்ட மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான சித்திரவதை, லஞ்சம் வாங்குதல், மதுவுக்கு அடிமையாதல் போன்ற சீர்கேட்டுகள் தொண்டர்களிடத்தில் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டது.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த பிரகாஷ் காரத், இத்தகைய பிரச்சனைகள் இல்லை என்று கூறவில்லை. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications