முட்டத்தில் படகில் குண்டுவெடிப்பு: 3 படகுகளில் இருந்து 64 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்

குமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே உள்ள முட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் 25ம் தேதி பங்கு பேரவை தேர்தல் தொடர்பாக இரு கோஷ்டிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது. ஒரு கோஷ்டி இன்னொரு கோஷ்டி மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. அப்பகுதியில் உள்ள வீடுகள் சூறையாடப்பட்டன. இதையடத்து அங்கு நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்ட பிறகே நிலைமை கட்டுக்குள் வந்தது. இதைத்தொடர்ந்து நடந்த அமைதி பேச்சுவார்த்தைக்குப் பிறகு அமைதி திரும்பியது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு துக்க வீட்டிற்கு சென்ற மீனவர் கிறிஸ்டியன் என்பவர் ஒரு கும்பலால் தாக்கப்பட்டார். இது குறித்து 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனால் மீண்டும் கோஷ்டி மோதல் ஏற்படும் சூழல் நிலவியதால் அங்கு ஆயுதம் ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு மேலமுட்டம் பகுதியில் நடுக்கடலில் நிறுத்தப்பட்டிருந்த படகில் நாட்டு வெடிகுண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்தன. இதனால் அப்பகுதி மக்களும் அதிரிச்சி அடைந்தனர். உடனே இது குறித்து எஸ்.பி. பிரவேஷ் குமாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவரது உத்தரவின்பேரில் டி.எஸ்.பி.க்கள் பாஸ்கரன், பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். வெடிகுண்டு நிபுணர் குழுவும் வரவழைக்கப்பட்டது.
குண்டு வெடித்து சேதமடைந்த அந்த படகில் நடத்தப்பட்ட சோதனையில் குண்டுகள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் அதன் அருகே நின்று கொண்டிருந்த 3 படகுகளில் இருந்து 11 வாளிகளில் வைக்கப்பட்டிருந்த 64 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தன. அவற்றை வெடிகுண்டு நிபுணர்கள் செயலிழக்கச் செய்தனர். இந்த பணி நள்ளிரவு வரை நடந்தது. குண்டுகளை செயலிழக்கச் செய்து கொண்டிருக்கையில் எதிர்பாராவிதமாக ஒரு குண்டு வெடித்ததில் நெல்லையைச் சேர்ந்த சப்- இன்ஸ்பெக்டர் முருகேசன் படுகாயம் அடைந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதற்கிடையே நெல்லை சரக டி.ஐ.ஜி. வரத ராஜு, மாவட்ட எஸ்.பி. பிரவேஷ் குமார் ஆகியோர் நேற்றிரவு சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். வெளியூரில் தங்கி பணிபுரியும் ஏராளமானோர் ஈஸ்டர் பண்டிகைக்காக ஊர் திரும்பும்போது அவர்களை தாக்கும் நோக்கத்தில் மர்ம நபர்கள் குண்டுகளை பதுக்கி வைத்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கடந்த டிசம்பர் மாதம் நடந்த கலவரத்தின்போது சிலர் படகுகளில் ஏறி கடலுக்குள் சென்று தலைமறைவாகிவிட்டனர். அப்போது சென்றவர்கள் கள் வெடிகுண்டுகளை எடுத்துச் சென்று பதுக்கி வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. நேற்று குண்டு வெடித்த படகும், வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யபப்ட்ட படகுகளும கடந்த சில மாதங்களாக நடுக்கடலிலேயே நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதனால் யாருக்கும் சந்தேகம் வரவில்லை.
முட்டம், மேலமுட்டம், நடுமுட்டம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று 3வது நாளாக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications