சாலை விபத்து: உறவினரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பாஜக நிர்வாகி உள்பட 3 பேர் பலி
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட உறவினரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது ஏற்பட்ட சாலை விபத்தில் பாஜக நிர்வாகி உள்பட 3 பேர் பலியாகினர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (30). அவருக்கு நேற்று முன்தினம் இரவு திடீர் என்று உடல் நலம் பாதித்தது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக அவரை அங்கிருந்து புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸில் கொண்டு சென்றனர்.
அந்த ஆம்புலன்ஸிற்கு பின்னால் ஒரு காரில் அவரது உறவினர்கள் சந்திரசேகர், மதிவாணன் (55), விநாயகமூர்த்தி (25), ஜெகதீசன் (46), கார்த்திக் (30), நாகப்பன் (22), கோவிந்தன் (23), தெட்சிணா மூர்த்தி (32) ஆகியோர் சென்றனர். நெடுமுடி கிள்ளிவளவன் என்பவர் காரை ஓட்டினார்.
புதுக்கோட்டை-அறந்தாங்கிக்கு இடையே உள்ள முத்துப்பட்டினம் என்ற இடத்தில் நள்ளிரவு 12.30 மணிக்கு சென்று கொண்டிருக்கையில் புதுக்கோட்டையில் இருந்து கரும்பு ஏற்றிக் கொண்டு அறந்தாங்கி நோக்கி வந்த டிராக்டரும், காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதின. இதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. டிராக்டரில் இருந்த கரும்புகள் சாலையில் விழுந்தது.
இந்த கோர விபத்தில் கார் டிரைவர் நெடுமுடி கிள்ளிவளவன், காரில் இருந்த மதிவாணன், விநாயகமூர்த்தி ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிர் இழந்தனர். மேலும் காரில் இருந்த 6 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பலியான விநாயகமூர்த்தி அறந்தாங்கி நகர் பாஜக இளைஞர் அணி துணை தலைவர் ஆவார். இந்த சம்பவம் பற்றி அறிந்த பாஜக மாநில துணை செயலாளர் ஹெச். ராஜா மற்றும் புதுக்கோட்டை பாஜக நிர்வாகிகள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த நெடுமுடி கிள்ளிவளவன், மதிவாணன், விநாயகமூர்த்தி ஆகியோரின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். காயமடைந்து அங்கு சிகிச்சை பெற்று வரும் விநாயகமூர்த்தியின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர்.












Click it and Unblock the Notifications