விசிட்டிங் கார்டுகளுக்காக மட்டுமே திமுக இளைஞரணியினர் பதவியை பயன்படுத்தக் கூடாது: ஸ்டாலின்

தேனியில் நடந்த திமுக இளைஞரணி புதிய நிர்வாகிகள் தேர்வுக்கான நேர்காணல் கூட்டத்தில் அவர் பேசுகையில்,
1965ம் ஆண்டில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இளைஞர்கள், மாணவர்கள் பெரும் பங்கு வகித்தனர். ஆனால் இன்று இளைஞர்களிடம் தியாக உணர்வு மங்கி வருகிறது.
மதுரையில் ஜான்சி ராணி பூங்காவில் 1980ல் திமுக இளைஞரணி தொடங்கப்பட்டது. 1982ல் திருச்சி மாநாட்டில் இளைஞரணி நிர்வாகிகளாக நான் உட்பட ஏழு பேர் நியமிக்கப்பட்டோம்.
திமுக இளைஞரணிப் பதவிகளில் இளைஞர்களுக்கு மட்டும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பது தலைவர் கருணாநிதியின் விருப்பம்.
இதுவரை கடந்த காலங்களில் மாவட்டச் செயலாளர், நகர, ஒன்றிய செயலாளர்களின் பரிந்துரையின் பேரில் இளைஞரணி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வந்தனர். இப்போது இந்த முறையை மாற்றி, மாவட்டம்தோறும் சென்று நேர் காணல் நடத்தி சிறந்தவர்களைத் தேர்வு செய்து, நேரடி நியமனம் செய்யப்படுகின்றனர்.
அறிஞர் அண்ணா காலத்தில், கட்சி நிதிக்காக ரூ.10 லட்சம் இலக்கு நிர்ணயித்த போது, தலைவர் கருணாநிதி சுற்று பயணம் செய்தும், மேடைகளில் பேசியும், நடித்தும் ரூ.11 லட்சம் நிதி திரட்டிக் கொடுத்தார். தற்போது இந்நிலை மங்கி வருகிறது. இருப்பினும் இளைஞரணி பலமுடன் இருப்பதால், மீண்டும் திமுக மிகப் பெரிய எழுச்சி பெறும்.
நான் நேர்காணல் நடத்தும் இடங்களில் எல்லாம் இளைஞர்கள் கூட்டம் அலை மோதுகிறது. நான் எதிர்பார்த்ததை விட கூட்டம் அதிகமாக இருக்கிறது. இளைஞர்களின் ஆதரவால் திமுக எழுச்சியுடன் உள்ளது.
தேனி மாவட்டத்தை பொறுத்தவரை 8 ஒன்றியங்களுக்கு 106 பேரும், 6 நகராட்சிகளுக்கு 81 பேரும், 22 பேரூராட்சிகளுக்கு 289 பேரும் மொத்தம் 476 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இதில் தேர்வாகும் இளைஞரணி நிர்வாகிகள் விசிட்டிங் கார்டுகளுக்காக மட்டுமே பதவியை பயன்படுத்தக் கூடாது. மக்கள் பிரச்னைகளுக்காக போராட வேண்டும்.
பதவி கிடைக்காதவர்கள் தகுதியற்றவர்கள் என்ற அர்த்தம் இல்லை. இவர்களுக்கு அடுத்தடுத்து பதவி வழங்கப்படும் என்றார்.
பின்னர் விருப்ப மனு அளித்தவர்களை தனித்தனியே அழைத்து மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார்.












Click it and Unblock the Notifications