ஒரே நபர் பெயரில் வெவ்வேறு வீடுகளுக்கு சமையல் கேஸ் இணைப்பு பெற முடியாது -நீதிமன்றம்
சென்னை: ஒரு நபர் பெயரில் வெவ்வேறு வீடுகளுக்கு சமையல் கேஸ் இணைப்பு பெற முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் ஆர்.முத்துகிருஷ்ணனுக்கு சென்னையிலும் வீடு உள்ளது. சென்னை அடையாறு பகுதியில் உள்ள சமையல் கேஸ் ஏஜென்சியில் இவர் வீட்டு உபயோகத்துக்காக 2001ம் ஆண்டு சமையல் இணைப்பைப் பெற்றார். அந்த இணைப்பை பின்னர் நாகப்பட்டினம் வீட்டுக்கு மாற்றி பயன்படுத்தினார்.
பின்னர் சென்னை வீட்டுக்கு என இன்னொரு இணைப்பைப் பெற விண்ணப்பித்தார். அப்போது இந்தியன் ஆயில் கழகத்தின் சார்பில் சோதனை நடத்தப்பட்டபோது அவருக்கு 2 இணைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, நாகையில் உள்ள வீட்டுக்கான சமையல் கேஸ் சப்ளை நிறுத்தப்பட்டது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முத்துகிருஷ்ணன் வழக்குத் தொடர்ந்தார். உடனடியாக நாகப்பட்டினம் வீட்டுக்கு சமையல் கேஸ் சிலிண்டர் சப்ளையை தொடர உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
ஆனால், அதற்கு இந்தியன் ஆயில் கழகம் எதிர்ப்பு தெரிவித்தது. ஒருவருக்கு 2 சமையல் சமையல் கேஸ் இணைப்புகள் வழங்க முடியாது என்று கூறியது.
ஆனால் முத்துகிருஷ்ணன், ஒரு வீட்டில் 2 சிலிண்டர் இணைப்பு வைத்திருப்பதுதான் தவறே தவிர, 2 வீடுகள் இருக்கும் பட்சத்தில் வீட்டுக்கு ஒரு இணைப்பை பெறுவது தவறல்ல என்று வாதாடினார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.ராமசுப்பிரமணியன், பொது வினியோக முறையின்படி, ஒருவருக்கு ஒரு சமையல் கேஸ் இணைப்புதான் கொடுக்க முடியும் என்று விதி கூறுகிறது. அதன்படி அவர் ஒரு இணைப்பை மட்டும்தான் பெற முடியுமே தவிர, அவரது ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு இணைப்பை பெற முடியாது என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications