இந்தியாவில் அமெரிக்க கடற்படைகள்- வங்கக் கடலில் கூட்டுப் பயிற்சி
சென்னை: வங்கக் கடற்பரப்பில் இந்தியா மற்றும் அமெரிக்க நாடுகளின் கடற்படையினரும் ஒரு வார கால கூட்டுப் பயிற்சியில் ஈடுபட உள்ளனர். இக்கூட்டுப் பயிற்சி நாளை சனிக்கிழமை தொடங்குகிறது.
'மலபார்"
இந்திய, அமெரிக்க கடற்படைகளின் கூட்டுப் பயிற்சிக்கு "மலபார்" என்று பெயரிடப்பட்டுள்ளது. இரு நாடுகளும் 1992-ம் ஆண்டு முதல் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இப்பயிற்சியில் அமெரிக்க கடற்படையின் விமானம் தாங்கி போர்க் கப்பலான யு.எஸ்.எஸ்.கார்ல்விஷன், யு.எஸ்.எஸ். ஹார்லே. யு.எஸ்.எஸ்.பங்கர் ஹில் ஆகியவை பங்கேற்கின்றன. அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல்களும் இதில் பங்குபெறுகிறது.
ஒசாமா கப்பல்
அமெரிக்காவின் கார்ல்விஷன் போர்க் கப்பலானது ஆப்கானிஸ்தான் போரில் அமெரிக்காவால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் அல்குவைதா தலைவர் பின்லேடன் பதுங்கியிருந்த இடத்தை அமெரிக்க படைகள் தாக்கி கொன்றன. அப்போது கைப்பற்றப்பட்ட ஒசாமா பின்லேடனின் உடலை கார்ல்விஷன் கப்பலில் எடுத்துச் சென்றுதான் கடலில் வீசப்பட்டதாக கூறப்பட்டது.
இந்திய கப்பல்கள்
இந்தியக்கடற்படை சார்பில் ஐஎன்எஸ் சத்புரா, ஐஎன்எஸ் ரன்விஜய், ஐஎன்எஸ் ரன்விர், ஐஎன்எஸ் குலிஷ், ஐஎன்எஸ் ஷக்தி ஆகிய 5 போர்க்கப்பல்கள் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்கின்றன.
இக்கூட்டுப் பயிற்சியின் முதல் 3 நாட்கள் கருத்தரங்காக நடைபெறுகிறது. சென்னை துறைமுகத்தில் நாளை தொடங்கும் இக்கருத்தரங்கு வரும் 9-ந் தேதிவரை நடைபெற உள்ளது.
இதைத் தொடர்ந்து 10-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை வங்கக்கடற்பரப்பில் இரு நாடுகளின் கடற்படைகளும் கூட்டுப்பயிற்சியில் ஈடுபடும். கப்பல் மேல்தள செயல்பாடுகள், விண் பாதுகாப்பு பயிற்சிகள், ஒருங்கிணைந்த நீர் மூழ்கி கப்பல் தடுப்பு போர் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளில் இரு நாடுகளின் கடற்படைகளும் ஈடுபடுட உள்ளன.
ஆசிய பிராந்தியம்
ஆசிய பிராந்தியத்தில் கவனம் செலுத்தப்படும் என்ற அமெரிக்காவின் தொடர் அறிவிப்புகளின் ஒருபகுதியாக ஏற்கெனவே ஆஸ்திரேலியாவின் டார்வின் துறைமுகப் பகுதியில் 200 கடற்படை வீரர்களை அமெரிக்கா நிறுத்தியுள்ளது.
இந்நிலையில் வங்கக் கடற்பரப்பில் கூட்டுப் பயிற்சிகளை இந்தியாவுடன் அமெரிக்கா மேற்கொள்வது குறிப்பிடத்தக்கதாகும்.












Click it and Unblock the Notifications