சரத் பவாருக்கு கிரிக்கெட் பார்க்கவே நேரம் பத்தவில்லை: தா.பாண்டியன் தாக்கு

நாகை மாவட்டம் அவுரித்திடலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் பேசியதாவது,
இந்தியாவில ஆண்டு தோறும் 25,000 டன் நெல் மக்கி புழுத்து குப்பையில் கொட்டப்படுகிறது. குப்பையில் கொட்டுவதை ஏழைகளுக்கு கொடுங்கள் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. இலவசமாக கொடுத்தால் மக்கள் கெட்டுப் போய்விடுவார்கள் என்கிறார் மத்திய உணவுத்துறை அமைச்சர் சரத் பவார். அவருக்கு கிரிக்கெட் பார்க்கவே நேரம் போதவில்லை. அப்புறம் எப்படி மக்கள் மீது அக்கறை வரும்.
இந்தியாவில் இருந்து கடத்தப்பட்டு வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணம் ரூ.120 லட்சம் கோடி ஆகும். இது அரசு ஒப்புக்கொண்டுள்ள கணக்கு. சுவிஸ் வங்கியும், ஜெர்மன் வங்கியும் சொல்கிற கணக்கு இது.
இந்தியாவில் இருந்து கருப்பு பணத்தை கடத்திக் கொண்டு போகிறவனுக்கு சிக்கல் இல்லை. ஆனால் அந்த பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் சிக்கல் இருப்பதாக சொல்கிறது மத்திய அரசு.
ராணுவத்திற்கு டிரக்குகள் வாங்கியதில் ரூ. 3,500 கோடி ஊழல் நடந்திருக்கிறது. நாடாளுமன்றத்தில் ராணுவ விஷயங்களை விவாதிக்கக் கூடாது என்கிறார்கள். அது என்ன ராணுவ ரகசியம். அமெரிக்கா, ஜெர்மனி, ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்து தான் நாம் ஆயுதம் வாங்குகிறோம். நம்மிடம் என்ன ஆயுதம் இருக்கிறது என்று அவர்களுக்கு தெரியாதா?
பசுமைத் திட்டத்தின்கீழ் வீடு பெற வேண்டும் என்றால் அதிமுக உறுப்பினராக இருக்க வேண்டும். ஏனென்றால் அவர்களுக்கு மட்டுமே டோக்கன் கொடுத்து வீடு கட்டிக் கொடுக்கின்றனர் என்றார்.












Click it and Unblock the Notifications