ராமஜெயம் கொலையாளி காயின் போனில் அம்மா மண்டபத்திலிருந்து நெல்லைக்குப் பேசினானா?

திருச்சியில் திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு -வின் தம்பி கே.என்.ராமஜெயம் கடந்த 29 ம் தேதி மர்ம நபர்களால் கடத்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் மேற்பார்வையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விசாரணையில் பெரிய அளவில் உதவியாக இருக்கும் என போலீசார் எதிர்பார்த்த கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் செல்போன் எண்கள் ஆகியவற்றின் மூலம் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இக்கொலையில் முக்கிய ஆதாரமாக, கொலை நடந்த அன்று ராமஜெயம் கடத்தப்பட்ட பின்னர் கொலையாளிகள் காலை 8.30 மணியில் இருந்து 8.45 மணி வரை ராமஜெயம் வீடு, கேர் கல்லூரி மற்றும் அவரது குடும்ப நண்பர்கள் ஆகியோருக்கு ராமஜெயத்தின் செல்போனில் இருந்து பேசி முன்னாள் அமைச்சர் நேருவின் செல்போன் நம்பரை கேட்டு பேசியுள்ளனர்.
இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் கொலையாளிகள் அந்த சமயங்களில் ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதியில் இருந்ததாக செல்போன் டவர் மூலம் தெரிய வந்தது. போலீஸ் விசாரணையில், கொலையாளிகளில் ஒருவன் சம்பவத்தன்று காலை 8 மணியளவில் அம்மா மண்டபம் பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் இருந்து 1 ரூபாய் காயின் போனில் இருந்து திருநெல்வேலிக்கு பேசியுள்ளான். சுமார் 20 நிமிடம் கடைக்காரரிடம் இருந்து ஒவ்வொரு 1 ரூபாய் காயினாக வாங்கி 20 ரூபாய்க்கு பேசி இருக்கிறான்.
இந்த தகவல் தற்போது தனிப்படை போலீசாருக்கு கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் சம்மந்தப்பட்ட பெட்டிக்கடையில் இருந்து திருநெல்வேலிக்கு பேசிய நம்பரை பெற்ற தனிப்படை போலீசார் அதற்கு டயல்செய்து பார்த்த போது அது சுவிட்ச் ஆப் ஆகியிருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த திருச்சி தனிப்படை போலீசார், திருநெல்வேலி தனிப்படை போலீசாருக்கு இது குறித்து தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் தனிப்படை போலீசார் அந்த சிம்கார்டு-க்குரிய நபரின் முகவரி மூலம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன்பேரில், ராமஜெயம் கொலை வழக்கில் தொடர்புடைய இரண்டு பேரை சென்னையில் போலீசார் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்களிடம் ரகசிய இடத்தில் விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் போலீஸார் இதை உறுதிப்படுத்தவில்லை.
மேலும், கோட்டை ரயில்வே ஸ்டேஷனை ஒட்டியபகுதியில் இருந்து தான் ராமஜெயம் கடத்தப்பட்டார் என்பதனை தனிப்படை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். அந்த இடத்தில் ராமஜெயம் பாக்கெட்டில் இருந்த சில விஐபிகளின் விசிட்டிங் கார்டு மற்றும் ஒரு ரயில்வே டிக்கெட் ஆகியவை கீழே கிடந்துள்ளது. அதையும் கைப்பற்றிய தனிப்படை போலீசார் அது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications