நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் இரவில் கல்லூரி மாணவியிடம் செக்ஸ் சில்மிஷம்: கணக்கு ஆசிரியர் கைது
சென்னை: கோவையில் இருந்து சென்னை வந்த நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் நள்ளிரவில் கல்லூரி மாணவியிடம் செக்ஸ் சில்மிஷம் செய்த ஆசிரியரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அனிதா (வயது 19) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் தோட்டக்கலை 2ம் ஆண்டு படித்து வருகிறார்.
தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டதால், நேற்று கோவையில் இருந்து சென்னைக்கு நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்டார்.
ரயிலின் எஸ்-7 பெட்டியில் 31-வது படுக்கையில் அனிதா அமர்ந்தார். 32வது படுக்கையில் வாலிபர் ஒருவர் அமர்ந்திருந்தார். அனிதாவிடம் வலிய வந்து அறிமுகம் செய்து கொண்டார்.
சிறிது நேரத்தில் அனைத்து பயணிகளும் அவரவர் படுக்கைகளில் தூங்க ஆரம்பித்தனர். நள்ளிரவு நேரத்தில் அனைவரும் தூங்கிக்கொண்டு இருந்தபோது, அந்த வாலிபர் அருகே உள்ள படுக்கையில் படுத்திருந்த அனிதா போர்த்தியிருந்த பெட்ஷீட்டுக்குள் கையை விட்டு அவரிடம் சில்மிஷம் செய்ய ஆரம்பித்தார்.
திடுக்கிட்டு எழுந்த அனிதா அந்த வாலிபரை கடுமையாக எச்சரித்துவிட்டு அங்கிருந்து எழுந்து செல்போனை எடுத்துக் கொண்டு டாய்லெட் பக்கமாக ஓடினார்.
டாய்லெட் அருகே ஒட்டப்பட்டருந்த ரயில்வே காவல்துறை புகார் எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்தார். தகவல் அறிந்த சென்னை சென்டிரல் ரயில்வே போலீசார் உடனடியாக நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்த போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அப்போது நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் அரக்கோணத்தைத் தாண்டிக் கொண்டிருந்தது.
தகவல் கிடைத்ததும் ரயிலில் இருந்த போலீசார் எஸ்-7 பெட்டிக்கு விரைந்து சென்று, மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை பிடித்தனர். ரயில் காலை 4.30 மணிக்கு சென்ட்ரலை வந்தடைந்ததும் அந்த வாலிபரை ரயில்வே போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர்.
விசாரணையில் அந்த வாலிபரின் பெயர் சுரேந்தர்குமார் ரெளத் (30) என்பதும் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரைச் சேர்ந்த இவர் கோவையில் உள்ள மத்திய அரசின் கேந்திரய வித்யாலயா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் கணக்கு பாட ஆசிரியராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
சொந்த ஊருக்கு செல்வதற்காக சென்னை வந்துள்ளார். வரும் வழியில் கல்லூரி மாணவிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்து போலீசில் மாட்டியுள்ளார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications