தண்ணீர் பிடிக்கும்போது இடித்ததால் பெண் கைதிகள் மோதல்-கட்டிப்புரண்டு சண்டை!
திருச்சி : குடிநீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக திருச்சி பெண்கள் சிறையில் கைதிகள் மோதிக்கொண்டனர். கட்டிப்புரண்டு பயங்கரமாக சண்டை போட்ட பெண் கைதிகளை விலக்க முயன்ற பெண் போலீஸ்காரரையும் அவர்கள் குடத்தால் இடித்துத் தாக்கினர்.
திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் மகளிர் சிறை உள்ளது. இங்கு தமிழகம் முழுவதும் இருந்து 300 க்கும் அதிகமான விசாரணை கைதிகள் மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், கன்னியாகுமரியை சேர்ந்தவர்கள் லதா (25), ஞானசவுந்தரி (26). ஆகிய இருவரை கடந்த 3 ம் தேதி திருட்டு வழக்கில் கோவில்பட்டி போலீசார் கைது செய்து திருச்சி பெண்கள் சிறையில் அடைத்தனர்.
இவர்கள் இருவரும் தண்டனை கைதிகள் பகுதிக்கு குடத்துடன் தண்ணீர் பிடிக்க சென்றனர். அப்போது பாண்டியம்மாள் (50) என்ற தண்டனைக் கைதி தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். அவரது குடத்தை இடித்துக் கொண்டு இவர்கள் தண்ணீர் பிடிக்க முயன்றனர். இதற்கு பாண்டியம்மாள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்த விசாரணை கைதிகள் இருவரும் தண்ணீர் குடத்தால் பாண்டியம்மாளை தாக்கினர். அவருக்கு ஆதரவாக சில பெண் கைதிகள் ஓடிவந்து எதிர்தாக்குதல் நடத்தியதால் சிறையில் பரபரப்பு ஏற்பட்டது. இதில் பாண்டியம்மாளின் ஜாக்கெட் உள்ளிட்டவை கிழந்து போய் விட்டது.
அப்போது பணியில் இருந்த பெண் காவலர்கள் இருவர் ஓடிவந்து மோதலை தடுக்க முயன்றனர். அவர்களையும் கன்னியாகுமரி பெண்கள் குடத்தால் தாக்கினர். இதில் போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. பின்பு சிறைக் காவலர்களுக்கு சிறையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த மோதல் குறித்து ஜெயில் சூப்பிரண்ட் ஜெயபாரதி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் கைதிகளுக்குள் நடந்த இநத் சண்டையால் சிறைக்குள் பெரும் பரபரப்பாகிப் போனது.












Click it and Unblock the Notifications