சென்னை விமான நிலைய ஊழியர்களின் கெடுபிடி வசூல்-தம்பித்துரை மோதல்-பயணிகள் குமுறல்
சென்னை: வாகன பார்க்கிங் என்ற பெயரில் சென்னை விமான நிலையத்தில் நடக்கும் முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பப் போவதாக அதிமுக எம்.பி. தம்பிதுரை விமான நிலைய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இன்று விமான நிலையம் வந்த தம்பித்துரை, காரை விட்டு இறங்கியதுமே அவரிடம் காசு வசூலிக்க ஊழியர்கள் பாய்ந்ததால் சண்டையும் மூண்டது. அப்போது தம்பித்துரைக்கு ஆதரவாக மக்களும் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் புதிய வாகன கட்டண முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி பயணிகளை விமான நிலையத்திற்குள் இறக்கிவிடவோ, அழைத்துச் செல்லவோ வரும் வாகனஙகளுக்கு ஒரு சீட்டு கொடுக்கின்றனர். உள்ளே செல்லும் வாகனங்கள் 5 நிமிடத்திற்குள் வெளியே வராவிட்டால் ரூ.60 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்த புதிய முறையால் வாகன ஓட்டிகளுக்கும், கட்டண வசூலிப்பாளர்களுக்கும் தினசரி ஒரே சண்டையாக உள்ளது. பட்டப் பகல் கொள்ளை போல இது இருப்பதாக மக்கள் குமுறுகின்றனர்.
இந்த நிலையில், அதிமுக எம்.பி. தம்பித்துரையும் இந்த நிலையை சந்திக்க நேர்ந்தது. டெல்லி செல்வதற்காக அதிமுக எம்.பி. தம்பிதுரை இன்று காலை சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். விஐபி கார்கள் நிற்கும் இடம் நிரம்பி வழிந்ததால் சாதாரண பயணிகளின் வாகனங்கள் நிற்கும் இடத்தில் அவரது கார் நிறுத்தப்பட்டது.
5 நிமிடத்திற்கு மேல் அவரது கார் அங்கேயே நின்றதால் பணியாளர் ஒருவர் வந்து கார் டிரைவரிடம் ரூ.60 கட்டணம் செலுத்துமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தம்பிதுரை நேராக விமான நிலைய மேலாளர்கள் பிரபு, நளினி ஆகியோரிடம் சென்று காரைவிட்டு இறங்குவதற்குள் ரூ.60 கட்டணம் வசூலிப்பது ஏன் என்று கேட்டார்.
அதற்கு மேலாளர்கள் அளித்த பதில் அவருக்கு திருப்தியளிக்கவில்லை. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் புதிதாக வசூலிக்கப்படும் வாகன கட்டண முறையால் பயணிகள் படும் அவதி குறித்தும், வாகன பார்க்கிங் என்ற பெயரில் நடக்கும் முறைகேடு குறித்தும் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பப் போவதாக அவர் தெரிவித்தார். அப்போது அங்கிருந்த பயணிகள் இந்த விவகாரம் குறித்து தம்பிதுரையிடம் புகார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications