'நிதானம் இல்லா ஆசாமி'.. அதிமுக எம்எல்ஏ கதை.. தேமுதிக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு- கூண்டோடு வெளியேற்றம்

சட்டசபையில் இன்று உள்ளாட்சி மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினர் விஜய பாஸ்கர் பேசினார். அப்போது அவர் ஒரு கதை சொன்னார். அவர் கூறுகையில்,
ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட கோபுரத்தை ஒரு டிப்-டாப் ஆசாமி தாங்கி பிடித்துக் கொண்டு நான் தான் இதற்கு முட்டு கொடுத்து இருக்கிறேன். இல்லையென்றால் விழுந்து விடும் என்று கூறினார்.
ஆனால் நேரில் சென்று பார்த்தவர்கள் அவரே நிற்கும் நிலையில் நிதானமாக இல்லை என்பதை கண்டனர். எனவே அவர் சொன்னதை ஏற்கவில்லை. யாரும் முட்டு கொடுத்ததால் அல்ல நாங்கள் விட்டுக் கொடுத்ததால் தான் 29 இடங்கள் அவர்களுக்கு கிடைத்தது என்றார்.
இதற்கு தேமுதிக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர்கள் அனைவரும் எழுந்து நின்று விஜய பாஸ்கர் சொன்ன கதை எங்கள் கட்சித் தலைவரை குறிப்பிடுகிறது. எனவே அந்த கதையை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
ஆனால் சபாநாயகர் ஜெயக்குமார் அதை ஏற்கவில்லை. இது வெறும் கதை தான் யார் பெயரையும் அவர் குறிப்பிடவில்லை என்றார்.
ஆனால் தேமுதிக உறுப்பினர்கள் அதிமுக உறுப்பினர் சொன்ன கதையை சபை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்தனர். இதை தொடர்ந்து அவர்கள் அனைவரையும் சபையில் இருந்து வெளியேற்றுமாறு அவைக் காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து காவலர்கள் தேமுதிக உறுப்பினர்களை வெளியேற்றினர். சபையை விட்டு வெளியேற்றப்பட்ட தேமுதிக எம்எல்ஏ சந்திரக்குமார் நிருபர்களிடம் கூறுகையில், எங்கள் கட்சித் தலைவர் விஜயகாந்தை குறை கூறும் வகையில் அதிமுக உறுப்பினர் ஒரு கதை சொன்னார். அதை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தோம். ஆனால் அதை ஏற்காமல் சபாநாயகர் எங்களை சபையில் இருந்து வெளியேற்றி விட்டார் என்றார்.












Click it and Unblock the Notifications