பன்றிக் காய்ச்சல் நோய் பரிசோதனை: தனியார் ஆய்வகங்களில் கட்டணத்தைக் குறைக்க அரசு உத்தரவு

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பன்றிக் காய்ச்சல் நோய் உள்ளதா என்பதை உறுதி செய்யும் ஆய்வக பரிசோதனைகளை (ஆர்டி-பிசிஆர்) மேற்கொள்ள தமிழக அரசு 12 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்த தனியார் ஆய்வக உரிமையாளர்களுடன் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர்.வி.எஸ்.விஜய் தலைமையில் சென்னையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
ரூ3 ஆயிரம் கட்டணம்
இந்தக் கூட்டத்தில், பொதுமக்களின் நலன் கருதி, லாப நோக்கமின்றி பன்றிக் காய்ச்சல் நோய் கண்டறிய தரமான ஆய்வக பரிசோதனையான (ஆர்டி-பிசிஆர்) செய்வதற்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை இருந்த கட்டணத்தை குறைத்து ரூ.3 ஆயிரம் மட்டுமே ஓரே சீரான முறையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தனியார் ஆய்வகங்கள் மக்களிடம் கட்டணமாக பெற வேண்டும் என அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய் உத்தரவிட்டார். இதை அங்கீகரிக்கப்பட்ட ஆய்வக உரிமையாளர்களும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர்.
பன்றிக் காய்ச்சல் நோய் குறித்த பரிசோதனை விவரங்களை தினமும் அரசுக்கு உடனுக்குடன் தெரிவிக்க அனைத்து அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. மேலும், இந்த தனியார் ஆய்வகங்களில் மேற்கொள்ளப்படும் பரிசோதனை அரசின் கிங் நிலைய ஆய்வகத்தின் மூலமாக தரக் கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டு சரியான ஆய்வக பரிசோதனை மேற்கொள்ள கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பொது சுகாதாரத்றை இயக்குநர் டாக்டர் பொற்கைப்பாண்டியன், மருத்துவக்கல்வி இயக்குநர் டாக்டர் வம்சதாரா, கிண்டி கிங் நிலைய இயக்குநர் மற்றும் மருத்துவத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர் என்று அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications