சியாச்சினில் பனிச்சரிவில் சிக்கி 135 பாகிஸ்தான் வீரர்கள் மாயம்: உதவிக் குழுவை அனுப்பிய அமெரிக்கா
இஸ்லாமாபாத்: இந்திய- பாகிஸ்தான் எல்லைப் பகுதியான சியாச்சின் மலைப்பகுதியில் பனிப்பாறை சரிவில் சிக்கி 135 பாகிஸ்தானிய படையினர் புதையுண்டனர். அவர்களை மீட்க உதவியாக அமெரிக்கா ஒரு குழுவை அனுப்பியுள்ளது.
சியாச்சின் பனிமலைப் பகுதியில் கடந்த சனிக்கிழமை காலை 6 மணிக்கு திடீரென ஏற்பட்ட பனிப்பாறை சரிவில் 135 பாகிஸ்தான் படையினர் புதைந்து போயினர். மேலும் பாகிஸ்தான் படையினருக்காகபணிபுரிந்த 11 பொதுமக்களையும் காணவில்லை.
இரண்டு நாட்களாகிவிட்ட நிலையில் புதையுண்டு போனவர்களின் கதி என்ன? எவரேனும் உயிரோடு இருக்கின்றனரா? என்பது பற்றி எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. புதையுண்டு போனோரைத் தேடும் பணிகளை பாகிஸ்தான் ராணுவ தளபதி கயானி நேற்று பார்வையிட்டார்.
இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு உதவுவதாக இந்தியா ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் அமெரிக்காவும் ஒரு குழுவை அனுப்பி வைத்துள்ளது. 8 பேர் கொண்ட இக்குழுவினர் பாகிஸ்தான் படையினருக்கு ஆலோசனைகளை வழங்குகின்றனர்.
அமெரிக்கப்படைகள் நடத்திய வான்தாக்குதலில் 24 பாகிஸ்தான் படையினர் கடந்த நவம்பர் மாதம் கொல்லப்பட்டதால் பாகிஸ்தானுடனான உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் அமெரிக்கா உதவ முன்வந்திருப்பது இருதரப்பு விரிசலை சீர்செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானுக்கு வந்துள்ள அமெரிக்க குழு, சியாச்சின் மலைக்கும் செல்லுமா என்பது பற்றி தெரிவிக்கப்படவில்லை. உலகின் உயரமான போர்முனையான, இந்தியா - பாகிஸ்தானுக்கு முக்கிய எல்லைப் பகுதியான சியாச்சினுக்கு அமெரிக்காவின் குழு சென்றால் அது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படும்.












Click it and Unblock the Notifications