2ஜி தீர்ப்பும் குழப்பங்களும்.. ஜனாதிபதி மூலம் சுப்ரீம் கோர்ட்டிடம் விளக்கம் கோர மத்திய அரசு முடிவு

2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்களை ரத்து செய்து அளிக்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி ஏற்கெனவே மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனு மீதான விசாரணை வரும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
இந் நிலையில் நேற்றிரவு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த கேபினட் கூட்டத்தில் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதில், மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, கபில் சிபல், சல்மான் குர்ஷித், வீரப்ப மொய்லி, ப. சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
122 ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்களை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது குறித்தும், அந்தத் தீர்ப்பில் திருத்தங்களைக் கோருவது குறித்தும் மத்திய சட்ட அமைச்சகம், அட்டர்னி ஜெனரல், தொலைத்தொடர்பு லைசென்ஸ்களை வழங்குவதில் தொடர்புடைய பல்வேறு அமைச்சகங்கள் அளித்த கருத்துகள் குறித்தும் கேபினட் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், எத்தகைய திருத்தங்களைக் கோரலாம், எத்தகைய சந்தேகங்களை எழுப்பலாம் என்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு குறிப்பும் தயாரிக்கப்பட்டது.
இந்தக் குறிப்பு குறித்தும், தீர்ப்பின் சாதக பாதக அம்சங்கள் குறித்தும் மத்திய அமைச்சர்கள் விவாதித்தனர். இதையடுத்து லைசென்ஸ்களை ரத்து செய்த தீர்ப்பு குறித்து ஜனாதிபதி மூலம் உச்ச நீதிமன்றத்திடமே தெளிவான விளக்கங்களைக் கேட்கலாம் என முடிவு செய்யப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து அதனிடம் விளக்கம் கேட்க ஜனாதிபதிக்கு அரசியல் சட்டத்தின் 143வது பிரிவின் கீழ் உரிமையும் அதிகாரமும் உண்டு. இந்த அதிகாரத்தைக் கொண்டு உச்ச நீதிமன்றத்தைக் கேள்வி கேட்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தீர்ப்பினால் பல குழப்பங்கள்.. விளக்கம் கேட்பது ஏன்?:
உச்ச நீதிமன்றம் ஸ்பெக்ட்ரம் தொடர்பாக அளித்த தீர்ப்பில், அனைத்து இயற்கை வளங்களையும் ஏலத்தில் விட வேண்டும், அரசின் கொள்கை முடிவுகள் தவறானவை என்று கூறியிருந்தது. தீர்ப்பின்படி, "இயற்கை வளங்களை ஏலத்தில் விட வேண்டும் என்றால் தண்ணீர், காற்று போன்றவையும் இயற்கை வளங்கள்தான். அவற்றை ஏலத்தில் விடுவது நடைமுறையில் சாத்தியமில்லை.
அதே போல ஸ்பெக்ட்ரம் விற்பனை விஷயத்தில் காங்கிரஸ் கூட்டணி அரசின் கொள்கை முடிவு தவறு என்றால், 2008ம் ஆண்டில் ஏலமின்றி ஒதுக்கீடு செய்யப்பட்ட ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்கள், 1994ம் ஆண்டுக்குப் பிறகு ஏலமின்றி ஒதுக்கப்பட்ட லைசென்ஸ்களின் நிலை என்ன?, பாதிக்கப்பட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்களின் முதலீடுகளை பாதுகாக்க என்ன செய்வது? போன்ற குழப்பங்கள் எழுந்துள்ளன.
மேலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்துவதால் ஏற்படும் சட்ட, நிர்வாக, பொருளாதார சிக்கல்கள் குறித்து ஜனாதிபதியிடம் விளக்கி, அவர் மூலமே தீர்ப்பு குறித்து உச்ச நீதிமன்றத்திடமே தெளிவான விளக்கங்களையும் திருத்தங்களையும் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications