''ராசாவை எச்சரித்தேன், ஆனால்,''.. முன்னாள் செயலாளர் மாத்தூர் சாட்சியம்!

நீதிபதி ஓ.பி.சைனி முன் மாத்தூர் ஆஜராகி கூறுகையில், 2006 ஜூலை முதல் 2007 டிசம்பர் 31ம் தேதி வரை மத்திய தொலைத்தொடர்புத் துறைச் செயலாளராகப் பணியாற்றினேன். நான் தொலைத்தொடர்பு செயலராகப் பணியாற்றியபோது தயாநிதி மாறன், துறையின் அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.
2007 மே மாதம் ராசா தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். துறைச் செயலர் என்ற முறையில் அமைச்சரின் ஆலோசகராகப் பணியாற்றினேன். 2009ம் ஆண்டில் மத்திய தொலைத்தொடர்புத் துறையின் கீழ், தொலைத்தொடர்பு ஆணையம் உருவாக்கப்பட்டது. அதன் தலைவராகத் துறைச் செயலாளர் இருக்க வேண்டும் என்ற விதியின்படி நான் அந்தப் பணியையும் ஆற்றினேன்.
எனது பதவிக் காலத்தில் 25 அலைக்கற்றை உரிமங்கள் வழங்கப்பட்டன. 2ஜி லைசென்ஸ்களை வழங்க கடைசி தேதி 2007 அக்டோபர் 1ம் தேதி என்று நிர்ணயிக்கப்பட்டது. அதை 2007 செப்டம்பர் 25 என்று அமைச்சர் ராசா முன் தேதியிட்டு மாற்றினார்.
தன்னிச்சையாக எடுக்கும் இந்த முடிவால் சட்டரீதியாக பல விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என்று அவரை எச்சரித்தேன். சரி, நான் அது பற்றி யோசிக்கிறேன் என்றார். ஆனால், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அமைச்சர் என்ற முறையில் ராசாவுக்கு வாய்மொழியாகவே ஆலோசனை வழங்கினேன். எனது யோசனை தொடர்பான எந்தக் குறிப்பையும் நான் எழுத்துப்பூர்வமாக பராமரிக்கவில்லை என்றார்.
ராசாவின் கடிதம் துறை ரீதியில் அனுப்பப்படவில்லை:
தொடர்ந்து மாத்தூர் அளித்த சாட்சியத்தில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக ராசாவிடம் விளக்கம் கேட்டு பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இருந்து 2007ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதியிட்ட கடிதம் வந்தது. அந்தக் கடிதத்துக்கு ஒரே நாளில் இரண்டு பதில் கடிதங்களை ராசா எழுதினார்.
ஆனால், அந்த இரண்டு கடிதங்களும் தொலைத்தொடர்புத் துறை மூலம் அனுப்பப்படவில்லை. ராசா அவற்றைத் தனிப்பட்ட முறையில் பிரதமருக்கு அனுப்பினார்.
இந்தக் கடிதங்களைத் தொடர்ந்து அதே ஆண்டில் டிசம்பர் 26ம் தேதியிட்டு பிரதமருக்கு ராசா எழுதிய கடிதங்கள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அந்தக் கடிதங்களும் தொலைத்தொடர்புத் துறை மூலமாகப் பிரதமருக்கு அனுப்பப்படவில்லை என்றே கருதுகிறேன் என்று மாத்தூர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications