சுகாதார மனிதவள மசோதா: பிரதமருக்கு ஜெயலலிதா எதிர்ப்புக் கடிதம்
சென்னை: தேசிய சுகாதார மனித வள ஆணைய மசோதாவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த மசோதா மாநிலங்களின் உரிமையை பறிக்கும் செயல் என்று அவர் கூறியுள்ளார்.
இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
மாநிலங்களவையின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிலைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுகாதார மனித வளத்திற்கான தேசிய ஆணைய மசோதாதொடர்பான எனது கடுமையான ஆட்சேபத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்.
இந்த புதிய மசோதாவானது மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் பிற மருத்துவ கல்வி சார்ந்த முடிவுகள் எடுக்கும் முறை மற்றும் அதன் தலைமை பொறுப்பை 25 உறுப்பினர்களின் வசம் ஒப்படைக்க வழி செய்கிறது. இவர்கள் அனைவருமே மத்திய அரசால் நியமிக்கப்படுபவர்கள்.
இது மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்கும் செயலாகும். இதனால் சுகாதார பணியாளர்கள் திட்டமிடல், பாடத் திட்டம், பாட முறை மற்றும் மருத்துவம், மருத்துவம் சார்ந்த பிரிவுகளில் பாடத் திட்டங்களை வழங்கும் புதிய கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குதல் ஆகியவற்றில் மாநில அரசுக்கு எந்த பங்கும் இல்லாமல் ஆகிவிடும்.
தேவை அடிப்படையிலான மருத்துவ, பல் மருத்துவ மற்றும் மருத்துவ துறை சார்ந்த பணியாளர் திட்டமிடல் என்பது பிராந்திய மற்றும் உள்ளூர் நலன், தேவை சார்ந்தே அமைய வேண்டும். திட்டங்களை வகுக்கும் அமைப்புகளில் மாநிலங்களுக்கு போதுமான பிரதிநிதித்துவம் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். ஏற்கனவே உள்ள தேசிய மற்றும் மாநில கவுன்சில்கள் தொடர்பாக தற்போதுள்ள நிலையே தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
தேசிய கவுன்சில் அளவில் மாநிலங்களில் அதிகரித்த பங்களிப்போடு இவற்றை மேலும் மேம்படுத்தவும், வலுவாக்கவும் முடியும் என்று நம்புகிறேன். எனவே, கூட்டாட்சி தத்துவத்தின் ஆணி வேரையே அசைக்கும் வகையில் புதிய அமைப்புகளை உருவாக்குவதன் மூலம் முக்கியத்துவம் வாய்ந்த சுகாதார மனிதவள துறையில், மாநிலங்களின் அதிகாரத்தை பறிக்கும் இந்த தேசிய சுகாதார மனிதவள ஆணைய மசோதாவுக்கு எனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்துக்கொள்கிறேன்
இவ்வாறு ஜெயலலிதா தனது கடிதத்தில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications