சுனாமி குறித்து அஞ்சத் தேவையில்லை: ஜெயலலிதா அறிவுறுத்தல்
சென்னை: சுனாமி குறித்து மக்கள் யாரும் அஞ்சத் தேவையில்லை என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவில் நேற்று பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது. இதற்கிடையே ஹைதராபாதில் உள்ள இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்தது. இதனால் மக்கள் பீதியடைந்தனர். சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உயர் அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
எனது உத்தரவின் அடிப்படையில் கடலோர மாவட்ட ஆட்சியர்கள் உஷார்படுத்தப்பட்டனர். கடற்கரை பகுதிகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகத்தால் எச்சரிக்கப்பட்டது. எந்தவித அவசர சூழ்நிலைகளையும் எதிர்கொள்ளக் கூடிய வகையில் தயார் நிலையில் இருக்கும்படி அரசு அலுவலர்கள், மருத்துவமனை அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டனர். இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் சமயத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த செயல்முறைத் திட்டத்தை நடைமுறைப்படுத்திட மாவட்ட ஆட்சியர்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், ‘சென்னை நகரிலும் கடற்கரையில் இருந்த மக்களுக்கு அங்கிருந்து செல்லும்படி ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பொதுவாக 8.5 அலகுகள் கொண்ட நில நடுக்கம் ஏற்பட்ட பின் அதனைத் தொடர்ந்து சிறு சிறு நடுக்கங்கள் ஏற்படுவது வாடிக்கை. இதைப் போன்று சிறு நில நடுக்கங்கள் தமிழ்நாட்டின் சில இடங்களில் உணரப்பட்டன. சுனாமி ஏற்படக் கூடிய வாய்ப்பு இல்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து எந்த நிலைமையையும் சமாளிக்க கூடிய வகையில் அரசு இயந்திரம் தயார் நிலையில் உள்ளது. எனவே, பொதுமக்கள் யாரும் சுனாமி குறித்து எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications