பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 8 உயர்கிறது?
டெல்லி: பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.8 உயர்த்துமாறு இந்தியன் ஆயில் கார்பரேஷன் தலைவர் ஆர். எஸ். புடோலா மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.
பெட்ரோல் விற்பனையால் எண்ணெய் நிறுவனங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 50 கோடி நஷ்டம் ஏற்படுவதால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.8 உயர்த்துமாறு இந்தியன் ஆயில் கார்பரேஷன் தலைவர் ஆர். எஸ். புடோலா மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த 2 ஆண்டுகளில் பெட்ரோல் விலை கிட்டத்தட்ட 50 சதவீதம் அதிகரி்ததுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வரும் மே மாதம் 7 தேதி நாடாளுமன்றத்தில் நிதி மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. அதற்கு ஒப்புதல் கிடைத்துவிட்டால் பெட்ரோல், டீசல் விலை உயரும் என்று மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவி்ததார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரி்ததுக் கொண்டே போவதால் எரிபொருள் விலையை உயர்த்த வேண்டியுள்ளது. நிதி மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்தவுடன் டீசல் உள்ளிட்டவையின் விலை உயரும் என்றார்.
கடந்த ஜூலை மாதம் டீசல் விலை கடைசியாக உயர்த்தப்பட்டது. மத்திய அரசின் உத்தரவை ஏற்று எண்ணெய் நிறுவனங்கள் கடந்த டிசம்பரில் இருந்து பெட்ரோல் விலையை உயர்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications