தேவகோட்டை அதிமுக நகர் மன்ற தலைவியை எதிர்த்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு!
தேவகோட்டை : தேவகோட்டை அ.தி.மு.க.நகராட்சி தலைவியை எதிர்த்து அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தேவகோட்டை நகராட்சிக் கூட்டம் அதன் தலைவர் சுமித்ரா (அ.தி.மு.க.) தலைமையிலும், துணைத் தலைவர் சுந்தரலிங்கம் (அ.தி.மு.க.) முன்னிலையிலும் நடைபெற்றது. கூட்டம் துவங்கியதும் சாதாரண கூட்டம் என அறிவித்ததை ரத்து செய்து, அவசரக் கூட்டம் என எந்த விதியின் அடிப்படையில் மாற்றப்பட்டது என அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சிலர் எதிர் கேள்வி கேட்டனர்.
இதற்கு பதில் அளித்த நகர் மன்ற தலைவர், போதிய அவகாசம் இல்லாததால் அவசர கூட்டமாக மாறியது. விதிப்படியே நடக்கிறது என்றார். இதனால், அ.தி.மு.க. கவுன்சிலர்களில் சண்முகநாதன் தவிர, 12 பேரும் வெளியேறினர். இந்த நிலையில், தலைவி சுமித்ராவும் அனைத்து தீர்மானங்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவித்து விட்டு, அவசரமாக கூட்ட அறையை விட்டு வெளியேறினார்.
இது குறித்து, நகராட்சி தலைவி சுமித்ரா செய்தியாளர்களிடம் கூறியதாவது
தேவகோட்டை நகராட்சியில் விஷகிருமிகள், ரவுடிகள் கூடாரமாக மாறி விட்டது. ஊழல், லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. வரிப்பணம் கொள்ளை போகிறது. ஒரு பெண் கவுன்சிலருக்கு கொலை மிரட்டல் விடுத்ததால், கூட்டத்திற்கே வரவில்லை. சில ஊழல்கள் பற்றி விவாதிக்க, பல ஆதாரங்களை திரட்டியுள்ளேன். என்னை மிரட்டி அடிபணிய வைக்க நினைக்கிறார்கள். இதற்கு நான் ஒரு போதும் அஞ்சமாட்டேன் என்றார்.