'அம்மா, வளர்மதியை டிஸ்மிஸ் செய்ங்க'...நாடார் பாதுகாப்பு பேரவை கோரிக்கை!

இதுகுறித்து இப்பேரவையின் நிறுவன தலைவர் எஸ்.பி ராஜதுரை கூறுகையில்,
தமிழக சட்டசபையில் சமூக நலத் துறை அமைச்சர் வளர்மதி பேசும் போது, மதிய உணவு திட்டம் அரசு திட்டமல்ல, மக்கள் பங்களிப்போடு நடந்த திட்டம் என்று குறிப்பிட்டு வரலாறு தெரியாமல் பேசியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பழைய காலத்தில் வருகை பதிவேடுகளில் குறைந்த மாணவ, மாணவிகளே இருந்த சூழ்நிலையில் ஒரு மாடு மேய்க்கும் சிறுவனிடம், "பள்ளிக்கு ஏன் செல்லவில்லை' என்று அப்போதைய முதல்வர் காமராஜர் கேட்டார்.
அதற்கு மாடு மேய்த்தால் மட்டுமே மதிய கஞ்சி கிடைக்கும், பள்ளிக்கு சென்றால் யார் தருவார்' என அந்த சிறுவன் கேட்டான். உடனே அதிகாரிகளை அழைத்து இதுதொடர்பாக ஆலோசனை நடத்தி ஒரே நாளில் 25 ஆயிரம் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை காமராஜர் கொண்டு வந்தார். பின்னர் ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர் மதிய உணவு திட்டத்தை சத்துணவு திட்டமாக செயல்படுத்தினார்.
அண்ணா என் தலைவர், காமராஜர் என் வழிகாட்டி'என எம்.ஜி.ஆர் பேசியதும், காமராஜர் பிறக்கவில்லை என்றால் நாங்கள் ஆடு, மாடு மேய்த்து கொண்டிருப்போம்' என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பேசியதும் அமைச்சர் வளர்மதிக்கு தெரிய வாய்ப்பில்லை.
இந்த வரலாறு தெரியாமல் அமைச்சர் வளர்மதி சட்டசபையில் பேசியுள்ளதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். உடனடியாக அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications