போலீசார் தாக்கியதில் தலித் வாலிபர் தற்கொலை: பார்த்தீபனூரில் பதற்றம்
இராமநாதபுரம்: பார்த்தீபனூர் அருகே புகார் கொடுக்க சென்ற தலித் வாலிபரை போலீசார் அடித்து உதைத்தால் அவர் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனூர் செட்டியார் தெருவில் வசித்து வருபவர் சேது. இவர் தலித் சமூதாயத்தை சேர்ந்தவர். இவருக்கும் அடுத்த வீட்டுக்காரருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க சேது சென்றுள்ளார். ஆனால் அங்கிருந்த காவல்துறை உதவி ஆய்வாளர் சித்தன் மற்றும் தலைமை காவலர்கள் போஸ் மற்றும் பரமசிவம் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து சேதுவை காவல் நிலையத்திலேயே வைத்து கடுமையாக தாக்கியதாக கூறப்படுகின்றது. இதனால் சேதுவுக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
சேதுவை தேடி அவரது மகன் பாலமுருகன் வந்த போது பாலமுருகனையும் காவல்துறையினர் தாக்கியதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில், மனம் உடைந்து போன சேது மற்றும் பாலமுருகன் இருவரும் இரவு வீட்டிக்கு சென்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனையறிந்த உறவினர்கள் பாலமுருகனை காப்பாற்றி பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் பாரத்திபனூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இம்மானுவேல் சேகரன் குருபூஜையின் போது பரமக்குடியில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். அந்த அதிர்ச்சியே இன்னும் விலகாத நிலையில் அதே ஊரில் போலீசார் தாக்கியதால் தலித் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் பதற்றம் உருவாகியுள்ளது.
காவல்துறையினரின் இந்த செயலுக்கு தலித் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications