ஜெயலலிதா சொன்ன புளி வியாபார கதை!

நேற்று ஜெயலலிதா கொண்டாடிய தமிழ்ப் புத்தாண்டு விழாவில் அவர் பேசியதன் ஒரு பகுதி:
"தைத் திங்கள் முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்பது ஒட்டுமொத்த எல்லாத் தமிழ் அறிஞர்களும், ஒப்புக் கொண்டுள்ள உண்மை'' என்று பொத்தாம் பொதுவாகக் கூறி தமிழர்களின் மனம் புண்படும் வகையில், தை மாதம் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக சட்டத்தின் மூலம் மாற்றி அமைத்தார் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி.
யார் கேட்டது இந்தச் சட்டத்தை? இந்தச் சட்டத்தினால் மக்களுக்கு என்ன பயன்? இந்தச் சட்டத்தை இயற்றுவதற்கான காரணத்தை தெளிவுபடுத்தினாரா கருணாநிதி? இந்தச் சட்ட முன்வடிவு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கொண்டு வரப்பட்ட போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர், என்.நன்மாறன், இந்த மாற்றத்திற்கான காரணங்கள் இருந்தால் அதனை தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டாரே! தெளிவுபடுத்தினாரா கருணாநிதி? இல்லையே!
இதிலிருந்தே, காரண நோக்கமின்றி, விளம்பர மோகத்தின் அடிப்படையில், இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது என்பது தெளிவாகிறது. இந்தச் சட்டம் இயற்றிய ஒரு சில நாட்களில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில், மிகப் பெரிய பாராட்டு விழா கருணாநிதிக்கு நடத்தப்பட்டது.
விளம்பரத்திற்காக எடுக்கப்படும் இது போன்ற நடவடிக்கைகளை நினைக்கும் போது, தமிழ்ப் புத்தாண்டை மாற்ற எடுத்த நடவடிக்கை தமிழை வளர்க்கவோ, தமிழுக்கு சிறப்பு சேர்க்கவோ எடுத்த நடவடிக்கை என எவரும் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். இது போன்ற விளம்பர உத்திகள் வியாபாரத்திற்குதான் உகந்ததே தவிர, தமிழ் வளர்ச்சிக்கு உகந்தது அல்ல. விளம்பரத்திற்காக எடுக்கப்படும் இது போன்ற நடவடிக்கைகளை நினைக்கும் போது, எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது.
புளி வியாபாரம்
ஒரு சிற்றூரில் கோபாலன் என்பவர் மளிகைக் கடை நடத்தி வந்தார். அவர் தனது வியாபாரத்தை நேர்மையுடன் நடத்தி வந்தார். தன் கடையில் பொருட்களை வாங்க வருவோர் விலையை குறைத்து கேட்டால், அந்த பொருட்கள் என்ன விலைக்கு வாங்கப்பட்டன என்பதையும்; தனக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதையும் அவர் தெரிவித்து விடுவார். வியாபார நுணுக்கம் தெரியாததால் கடையில் எதிர்பார்த்த லாபம் அவருக்கு கிட்டவில்லை.
எனவே, பக்கத்து ஊரில் வியாபார நுணுக்கம் தெரிந்து அதிக லாபம் ஈட்டும் அம்பலம் என்பவரை அணுகி, வியாபார நுணுக்கங்களை தன் மகன் கண்ணனுக்கு கற்றுத் தருமாறு கேட்டார் கோபாலன். அம்பலமும், அவனுக்கு வியாபார நுணுக்கங்களை கற்றுத் தருவதாக கூறினார். இதன்படி, தன் மகன் கண்ணனை அம்பலம் கடைக்கு அனுப்பி வைத்தார் கோபாலன்.
தொழில் ரகசியம்
வியாபார ரகசியத்தை கற்றுக் கொள்ள வந்த கண்ணனிடம், "என்னுடைய ஒவ்வொரு செயலையும் உற்றுப் பார். எதையும் மற்றவர் முன் கேட்காதே. யாரும் இல்லாத போது கேள்'', என்று அறிவுரை வழங்கினார் அம்பலம்.
சற்று நேரத்தில் அம்பலத்தின் கடைக்கு ஒரு வாடிக்கையாளர் வந்தார். அவர் கண்ணனிடம், "உயர் ரக புளியின் மாதிரியைக் காட்டு'' என்றார். உடனே கண்ணன், உயர் ரக புளியின் மாதிரியைக் காட்டினான். வாடிக்கையாளரின் முகம் மாறியது. "இதைவிட நல்ல புளி இருக்கிறதா? விலை அதிகமாக இருந்தாலும், பரவாயில்லை'' என்று கேட்டார் வாடிக்கையாளர். அதற்கு கண்ணன், "இது தான் மிகவும் உயர் ரக புளி. இதை விட உயர் ரகம் வேறு இல்லை'' என்றான்.
அரசியல் தந்திரம்
இதைப் பார்த்துக் கொண்டிருந்த அம்பலம், கண்ணனிடம் "இவர் இந்த ஊரில் மிகப் பெரிய மனிதர். இவருக்கு எப்பொழுதும் மிக உயர்ந்த ரக பொருட்கள் தான் பிடிக்கும். விலையைப் பற்றி அவருக்கு கவலை இல்லை'' என்று கடிந்து கொண்டு, "அந்த எவர்சில்வர் டிரம்மில் உள்ள புளியை அவருக்கு எடுத்துக் காட்டு'' என்று கூறினார். கண்ணன் குழப்பத்துடனே உள்ளே சென்று, எவர்சில்வர் டிரம்மில் இருந்த புளியை எடுத்துக் காட்டினான்.
இதைப் பார்த்ததும், அந்த வாடிக்கையாளரின் முகம் தாமரை போல் மலர்ந்தது. பின்னர், அவர் தனக்கு தேவையான புளியை வாங்கிச் சென்றார். வாடிக்கையாளர் சென்றதும், கண்ணன் அம்பலத்திடம், "இரண்டு புளியும் ஒரே ரகம்; ஒரே விலை தான். வேறு, வேறு டிரம்களில் இருந்தன அவ்வளவு தானே?'' என்று கேட்டான்.
அதற்கு அம்பலம், "நல்ல புளி என்பதை வாடிக்கையாளர் மனதில் நான் பதிய வைத்தேன். இதுதான் வியாபார தந்திரம்'' என்று கூறினார். இந்த வியாபாரி செய்தது வியாபார தந்திரம். அரசியலில், இது போல் தந்திரம் செய்பவர்கள் தமிழுக்கு தொண்டு செய்வது போல் காட்டிக் கொள்கின்றனர்," என்றார்.












Click it and Unblock the Notifications