மூன்றாக பிரிக்கப்பட்ட டெல்லி மாநகராட்சிக்கு இன்று தேர்தல்-கைப்பற்றப் போவது யார்?
டெல்லி: டெல்லி மாநகராட்சிகளுக்கான தேர்தலில் இன்று காலை வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இத்தேர்தல் கருதப்படுகிறது.
தலைநகர் டெல்லி மாநகராட்சியை முதல்வர் ஷீலா தீட்சித் மூன்றாக பிரித்து விட்டார். நிர்வாக வசதிக்காக இந்தப் பிரிவினை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, டெல்லி மாநகராட்சியானது டெல்லி கிழக்கு, டெல்லி தெற்கு, டெல்லி வடக்கு என்று 3 மாநகராட்சிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
பிரிக்கப்பட்ட டெல்லி மாநகராட்சிகளுக்கு இன்று காலை தேர்தல் தொடங்கியது. இத்தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் பாரதிய ஜனதா ஜனதா கட்சிக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. மொத்தம் 2,400 பேர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். மொத்தம் 11,543 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.
வாக்குப் பதிவையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மொத்தம் 30 ஆயிரம் ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வரும் செவ்வாய்க்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
3 மாநகராட்சிகளிலும் ஒரு கோடியே 12 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 42.95 லட்சம் பேரும் பெண்கள் 42.67 லட்சம் பேரும் உள்ளனர்.
2007-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி டெல்லி மாநகராட்சியை கைப்பற்றியது. இருப்பினும் தற்போதைய தேர்தலில் சமாஜ்வாதி கட்சியும் களமிறங்கியுள்ளது. இத்தேர்தலில்தான் முதல் முறையாக பெண்களுக்கு 50 விழுக்காடு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications