மதுரை வந்த ஸ்டாலினுக்கு சோதனை மேல் சோதனை..!
மதுரை: மதுரையில் முகாமிட்டு கட்சிக் கூட்டங்களை நடத்தி வரும் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் சோதனை மேல் சோதனையை எதிர்கொள்ள நேரிட்டிருப்பதால் கடும் அதிருப்தி அடைந்திருக்கிறார்.
அண்ணனால் அப்செட்
திமுக இளைஞரணி நேர்காணல் கூட்டம் மதுரை பி.டி.ஆர். மஹாலில் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. ஆனால் மதுரை மாநகர திமுக பொறுப்பாளர்கள் எவரும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
சென்னையில் தங்கியிருக்கும் மு.க. அழகிரியின் உத்தரவின்பேரிலேயே அவரது ஆதரவாளர்கள் எவரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
அழகிரியின் உத்தரவால்தான் திமுக பிரமுகர்கள் கலந்து கொள்ளவில்லை என்பதை கேள்விப்பட்ட ஸ்டாலின் வருத்தமடைந்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும் நேர்காணலை மு.க.ஸ்டாலின் தொடர்ந்து நடத்திவிட்டு அழகிரி ஆதரவாளரான ஏர்போர்ட் பாண்டியன் இல்ல திருமண விழாவில் அவர் கலந்து கொண்டார். இதிலும் கூட அழகிரி கலந்துகொள்ளவில்லை.
அரசால் சலசலப்பு
மதுரையில் திமுக இளைஞரணி நேர்காணல் கூட்டம் நடைபெற்ற பி.டி.ஆர். மஹாலுக்கு எதிரே தமிழ் ஜெயா திரையரங்கம் உள்ளது.
இதில் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்த ஒருகல் ஒரு கண்ணாடி படம் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் திடீரென திரையரங்கில் உள்ளே நுழைந்த போலீசார் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகக் கூறி ரெய்டு நடத்தினர். மேலும் ஒன்றரை லட்சம் ரூபாயையும் பறிமுதல் செய்தும் திரையரங்கு பணியாளர்கள் 7 பேரை கைது செய்தும் சென்றதால் ஸ்டாலின் கூட்டத்திலும் சலசலப்பு ஏற்பட்டது.
என்னத்த சொல்ல.. என்ற நிலையில் மதுரையில் மு.க.ஸ்டாலினின் முகாம் புலம்பிக் கிடக்கிறது..












Click it and Unblock the Notifications