தலிபான்களின் காபூல் முற்றுகை: 18 மணிநேரம் நீடித்த யுத்தம் முடிவுக்கு வந்தது!
காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலிபான்கள் நடத்திய அதிரடி தாக்குதல் 18 மணிநேரம் நீடித்தது. தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து தலிபான் தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுவிட்டனர்.
ஆப்கான் தலைநகர் காபூலில் வெளிநாட்டுத் தூதரகங்கள் மற்றும் நாடாளுமன்றத்தை இலக்கு வைத்து நேற்று முற்பகல் முதல் தலிபான் தீவிரவாதிகள் தாக்குதலைத் தொடங்கினர்.
தற்கொலைப் படைத் தாக்குதல்களை நடத்துவதன் மூலம் நேட்டோ படையினரை ஓரிடத்தில் கூடச் செய்து பின்னர் அவர்களுடன் மோதலில் ஈடுபடுவது என்ற வியூகம் வகுத்து தலிபான்கள் தங்களது "யுத்தத்தை" நேற்று நடத்தினர்.
அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜெர்மன் தூதரகங்களை இலக்கு வைத்தும் நாடாளுமன்றத்தை நோக்கியும் இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இத்தாக்குதலானது 18 மணி நேரம் நீடித்தது. முடிவில் அனைத்து தலிபான் தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுவிட்டதாக காபூல் நகர காவல்துறைத் தலைவர் ஹஸ்மதுல்லா தெரிவித்துள்ளார்.
இருப்பினும் நாடாளுமன்றம் அருகே ஒரு கட்டிடத்தில் பதுங்கியுள்ள தீவிரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்துவதாகவும் நேட்டோ ஹெலிகாப்டர்கள் அக்கட்டிடத்தின் மீது தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இரவு முழுவதுமே இத்தாக்குதல் நீடித்ததாகவும் இன்று காலையும் தாக்குதல் நீடிப்பதாகவும் காபூல்நகரவாசிகள் தெரிவித்துள்ளனர்.
தலிபான்களை ஒழித்துக் கட்டிவிட்டதால் 2014-ம் ஆண்டுக்குள் ஆப்கானிலிருந்து அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் வெளியேறிவிடும் என்று கூறிவந்த நிலையில் நடத்தப்பட்டுள்ள தாக்குதலானது தலிபான் அமைப்பு மிகவும் உயிர்ப்போடும் வீச்சோடும் இருப்பதையே வெளிப்படுத்தியிருக்கிறது.
மேலும் 17 அப்பாவி பொதுமக்களை அமெரிக்க படைவீரர் ஒருவர் சுட்டுக் கொன்ற சம்பவத்துக்கு பழி வாங்கும் சம்பவமாகவும் இதை அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.












Click it and Unblock the Notifications